
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் இன்று தனது குடும்பத்துடன் தரிசனம் மேற்கொண்டார்.
தெலுங்கானா முதல்வரை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கோவில் யானையுடன் வரவேற்றனர்.
கருட மண்டபம் வழியாக அரியப்படா வாசலை கடந்து மூலவர் சன்னிதியில் முத்தாங்கி சேவையில் இருக்கும் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயகி தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.
அரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இரண்டாவது முறை வந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழ்நாடு வந்துள்ளேன். நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை சந்திக்க உள்ளேன்.
தெலங்கானா முதல்வரின் வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கா - ரங்கா கோபுரம் மற்றும் முக்கிய வாயில்கள் முன்பாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.