Skip to main content

எட்டு வழிச்சாலையை போட விடமாட்டோம்!; சிறைவாயிலில் சீமான் மீண்டும் ஆவேசம்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

see re


எட்டு வழிச்சாலைக்கு கல்லை வேண்டுமானால் நடலாம். ஆனால் ஒருபோதும் சாலையைப் போட விடமாட்டோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆவேசமாக கூறினார்.


சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே கூமாங்காடு கிராமத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை கடந்த 18ம் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் நேரில் சந்தித்து கருத்து கேட்டார். 


இதையறிந்த மல்லூர் காவல்துறையினர், ஏற்கனவே ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமினில் இருக்கும்போது இதுபோல் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவரை கைது செய்தனர். அவருடன், அக்கட்சி நிர்வாகிகள் 9 பேரையும் கைது செய்தனர். அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 


இந்த வழக்கில் நேற்று மாலை அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து இன்று (ஜூலை 20, 2018) காலை சீமான் மற்றும் அவருடன் கைதான கட்சியினர் அனைவரும் விடுதலை ஆகி சிறையில் இருந்து வெளியே வந்தனர். சிறை வாயில் அருகே, சீமான் செய்தியாளர்களிடம் கூறியது:


சென்னை & சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக மக்களை சந்தித்துப் பேசுபவர்களையோ, இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களையோ அச்சுறுத்தவே என்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்படும் விவசாயிகளை மிரட்டுவதற்காக இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கின்றனர்.


கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கருத்து கேட்கின்றனர். அதேபோல் நாங்கள் ஏன் கருத்து கேட்கக்கூடாது? 90 சதவீதம் பேர் நிலத்தை கொடுத்துவிட்டார்கள் என முதல்வர் கூறும்போது, நாங்கள் மக்களை சந்தித்துப் பேசுவதில் என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது?


நான் மக்களை சந்திக்க முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறித்தான், கைது செய்தனர். எனவே நான் தற்போது போலீசாரிடம் அனுமதி கோரப் போகிறேன். அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சந்தித்துப் பேசுவேன்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின், என்னை அங்குள்ள மக்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. மதுரையில் தங்கியிருந்து கையெழுத்துப் போடுங்கள் என்றனர். இப்போது சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்து போடு என்கிறார்கள். எதற்கு இவ்வளவு அடக்குமுறை? என் உறவினர்கள் இறந்தால்கூட இழவுக்குப் போக முடியாது. முன்பு சிறையில் வைத்திருந்தனர். இப்போது விடுதலை செய்துவிட்டு திறந்தவெளி சிறையில் வைத்துள்ளனர். 


நீர்நிலைகளையும், மலைகளையும் அழிப்பதன் மூலம் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படும். இதை அரசு புரிந்து கொள்ளவில்லை. சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல ஏற்கனவே சாலைகள் இருக்கின்றன. ரயில், விமானப்போக்குவரத்தும் உள்ளன. பிறகு எதற்கு எட்டு வ-ழிச்சாலை?


வாகனப் பெருக்கம் அதிகரிப்பதால் எட்டு வழிச்சாலை போடுகிறேன் என்கிறார்கள். அப்படியானால் மக்கள்தொகை இப்போது 130 கோடியாகி விட்டது. இது இன்னும் அதிகரிக்கும். அவர்கள் சாப்பிட உணவு எங்கிருந்து உற்பத்தி செய்யப்படும்? விளை நிலங்களை அழித்துவிட்டால் எப்படி சோறு கிடைக்கும்? தொழிற்சாலையா அரிசி, பருப்பை உற்பத்தி செய்யும்?


எட்டு வழிச்சாலை போட அரசு முயற்சி செய்யும். ஆனால் ஒருபோதும் இந்த சாலையைப் போட முடியாது. சாலையைப் போடவும் நாங்கள் விடப்போறதில்லை. நீங்கள் கல்லை வேண்டுமானால் நடலாம். 25 வருடங்களுக்கு இவர்களே ஆட்சியில் இருக்கப் போவதாக நினைக்கின்றனர். அதெல்லாம் கிடையாது.


ராமநாதபுரத்தில் ஆட்டுத்தோல் வியாபாரம் செய்த செய்யாதுரை வீட்டில் இருந்து வருமானவரித்துறை இன்றைக்கு 150 கோடி ரூபாய் ரொக்கம், 150 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதுவும் ஒரே இடத்தில் இருந்து 36 கோடி ரூபாயை எடுத்துள்ளனர். ஒரே இடத்தில் இவ்வளவு பணம் என்றால், பல இடங்களில் இன்னும் எவ்வளவு பணம் இருக்கும்? ஒரு ஒப்பந்ததாரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது? 


இதில் இருந்து எட்டு வழிச்சாலை ஏன் போடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கின்றனர். செய்யாதுரை என்று பெயரை வைத்துக்கொண்டு நல்லா செய்யும் துரையாக இருந்துள்ளார்.


ரெய்டில் சிக்கிய பணம், நகை, சொத்துகள் எல்லாம் என்ன ஆனது என என்றாவது தெரிவிக்கப்பட்டு உள்ளதா? அந்த வழக்குகள் போலவே இதுவும் மாறிவிடும். இவை எல்லாமே மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள்தான். வேண்டும் என்றால் என் வீட்டிற்கு ரெய்டு வரட்டும். 


சிறுமிகள் பாலியல் குற்றத்தைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் சமூகம் திருந்த வேண்டும். ஒழுக்கநெறி என்பது கல்வித்துறையில் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்