Skip to main content

சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகு கண்மூடித்தனமான தாக்குதல்... தொழிலாளி தீக்குளித்து தற்கொலை: எஸ்.ஐ. கைது செய்யப்பட வேண்டும்: ராமதாஸ்

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
ramadoss

 

வாடகை கொடுக்காத புகாரில் தொழிலாளியை காவல்துறை ஆய்வாளர் தாக்கியதால் அவமானம் அடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் அந்த காவல்துறை ஆய்வாளர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த புழல் வினாயகபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு புழல் காவல்துறை ஆய்வாளர் தாக்கியதால் அவமானமடைந்து தீக்குளித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல் ஆய்வாளரின் மனிதநேயமற்ற இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.

 

கூலித்தொழிலாளி எந்த குற்றமும் இழைக்கவில்லை. ஊரடங்கு ஆணை காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால், வருமானமின்றி வாடியுள்ளார். அதனால் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் இது போன்ற சூழலில் வாடகை செலுத்த முடியாமல் ஏராளமானோர் உள்ளனர். அவர்களிடம் பெரும்பான்மையான வீட்டு உரிமையாளர்கள் கனிவுடன் தான் நடந்து கொள்கின்றனர்.  

 


வாடகை செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களிடம் கட்டாயப்படுத்தி வாடகை வாங்கக் கூடாது என அரசே கூறியுள்ளது. ஆனால், வாடகை செலுத்தாத சீனிவாசன் மீது அவரது வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தது மனிதநேயமற்ற செயல் என்றால், அதனடிப்படையில் அவரை காவல்துறை ஆய்வாளர் வீடு புகுந்து தாக்கியது சட்டவிரோத செயலும், குற்றமும் ஆகும்.  

 


காவல்துறை பயிற்சியின் போது எந்தெந்த சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என கற்றுத் தரப்படுகிறது. வாடகை தராதது சிவில் சிக்கல். இந்த சிக்கலில் காவல்துறை ஆய்வாளர் தலையிட்டு அத்துமீறியதும், வருவாய் இன்றி வாடியது தொழிலாளியை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன் கண்மூடித்தனமான தாக்கியதும் மன்னிக்க முடியாதவை. சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகு  காவல்துறையில் உள்ள சிலர் செய்யும் இத்தகைய செயல்களால் மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர்  ஏற்படுகிறது. இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும்.

 

தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த தொழிலாளியின் குடும்பதிற்கு பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.