
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதற்கு மாற்றாக மத்திய அரசு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மக்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகள் ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்ததால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள்.
இதனை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான விசாரணையில், பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு தவறானது. அதனை மறுபலீசனை செய்யவேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்கப்பட்டது என்று வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், நாகரத்னா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், “2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த போது 50 நாட்களுக்கும் மேலாக கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு 1970-களில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்த போது 3 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. எனவே, இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தது சரி. செயல்படுத்திய முறையும் சரி. அதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஆனால், நீதிபதி நாகரத்னா, ஆர்பிஐ சட்டத்தின் படி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தான் மேற்கொள்ள முடியும். மத்திய அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.