Skip to main content

“கடையேழு வள்ளல், மாமனிதன், கர்ணன்” - சூரி அஞ்சலி

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
soori tribute to vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் சூரி, “கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்திருக்கிறோம். மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரி வழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்ன சத்திரமா இருந்துச்சு. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும். கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சசிகுமார், “மாமனிதரை இழந்துவிட்டோம் கேப்டன் மக்கள் மனதில் என்றும் நிற்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்