Skip to main content

“அவர் மேல் எப்போதுமே அந்த பொறாமை உண்டு” - திருமாவளவன் குறித்து பா.ரஞ்சித்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
pa.ranjith about thirumavalavan

சென்னை அண்ணாசலையில், கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் ‘எருமை மறம்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு நூல் வெளியிட்டார். இயக்குநர் பா.ரஞ்சித் பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி குறித்து பா.ரஞ்சித் பேசுகையில்,  “சமீப காலமாக குறிப்பாக, இந்திய சூழலில் பல தலைவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மக்களுக்காகத் தனது வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப முக்கியமானது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து தூங்குவது வரை, மக்களுக்காகவே பேசி, அவர்களுக்காகவே சிந்தித்து, அவர்களின் நலன்களை பற்றி யோசித்து தன்னுடைய நலன்களை கூட பார்க்காமல் இருக்கிறார். அவர் மேல் ஒரு பொறாமை கூட உண்டு. ஏனென்றால் நான் ஒரு வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறை வாழுகிறேன். இலக்கிய தளத்திலிருந்து சினிமாவில் இயங்குகிறேன். எனக்கு சில விருப்பங்களும், ஏக்கங்களும் இருக்கு. கலையின் வழியால் என்னை அறிந்து கொண்டேன். அதே கலையின் வழியாக நான் யார் என்பதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஆனால் திருமா அண்ணன் தேர்ந்தெடுத்த செயல் வடிவம், தன் மக்களுக்காக தன்னை ஒப்புவித்தல் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அந்த பொறாமை எப்போதுமே அண்ணன் மேல் உண்டு. எல்லாராலும் அது செய்ய முடியாது. அப்படியிருந்ததினால் தான் வெல்லும் ஜனநாயகம் என்ற மிகப்பெரிய மாநாட்டை நடத்தி பல லட்சம் மக்களை திரட்டியிருக்கிறார்.

இந்தியாவே அசந்து போகிற அளவிற்கு இளைஞர்களை ஒன்று திரட்டியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் போது நமக்கே ஒரு எழுச்சி வருகிறது. டாக்டர்.அம்பேத்கர், பௌத்தத்தை தழுவிய போது அவ்வளவு பெரிய கூட்டத்தை உருவாக்கினார். அந்த கூட்டத்திலும் இந்த கூட்டத்திலும் எங்கேயுமே எந்த வன்முறையும் அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்து, மிகப்பெரிய கூட்டம், படை எங்களிடமும் இருக்கு, நாங்கள் சாதரண ஆள் கிடையாது. அதே சமயம் கட்டுப்பாடாக இருக்கிறோம். எங்களுக்கென்று பண்பாடு இருக்கு, அது ஒடுக்குமுறையை எதிர்க்கிற பண்பாடு என இந்திய தமிழக அரசியலில் ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார். சினிமா திரைப்படங்களில் வரும் மாஸ் காட்ச்சி போல நிகழ்த்தி காட்டினார். தன்னை பற்றி யார் பாராட்டுவார்கள், தூற்றுவார்கள், யார் கூட நிற்பார்கள், நிற்கமாட்டார்கள் என நினைக்காமல் கட்சி மீதும் மக்கள் மீதும் இருக்கிற அன்பும் மன உறுதியும் தான் அண்ணனை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கு. அவர் எடுத்திருக்கிற இன்னொரு முடிவு தேர்தலில் பானை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பது. அது ரொம்ப முக்கியமானது. அவர் போட்டியிடுகின்ற தொகுதிகளிலும் அண்ணன் மிகப் பெரிய வெற்றியடைய நாம் ஆதரவாக நிற்க வேண்டும்” என்றார். 

சார்ந்த செய்திகள்