Skip to main content

கவிதாலயா நிறுவனத்தின் புதிய திட்டம்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பிறந்த நாள் விழா 'ஒரே ஒரு பாலச்சந்தர்' என்ற பெயரில் கடந்த 10 ஜூலை அன்று சென்னையில் கே.பாலச்சந்தர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் நாசர், இயக்குனர்கள் வசந்த், சரண், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பாலச்சந்தரின் நண்பர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். 

 

pushpa kandasamy

 

நிகழ்ச்சியின் போது, பாலச்சந்தரின் மகளும் கவிதாலயா நிறுவனத்தின் பொறுப்பாளருமான புஷ்பா கந்தசாமி, கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். "என் தந்தை பாலச்சந்தர், எப்பொழுதும் எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பார், செயல்படுவார். அதனால்தான் சினிமா உலகம் செழிப்பாக இருக்கும்போதே, அங்கு அவர் முழுவீச்சில் படங்கள் இயக்கியபோதே, தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்கினார். அப்பொழுதே அவர் சொன்னார், "எதிர்காலத்தில் டிவிதான் ஆளப்போகிறது" என்று. அதுபோலவே தொலைக்காட்சி ஊடகம் விஸ்வரூபம் எடுத்தது. அவரது வழியிலேயே எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கவிதாலயா தன் புதிய அவதாரத்தை எடுக்கிறது. எங்கள் நிறுவனம் டிஜிட்டல் மீடியாவில் இறங்கவிருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் எங்கள் முதல் டிஜிட்டல் படைப்பு அமேசான் ப்ரைமில் வெளிவர இருக்கிறது" என்றார்.

 

balachandar with rajini kamal

 

இயக்குனர் கரு.பழனியப்பன், "பாலச்சந்தர் அவர்களின் நினைவைப் போற்றுவது என்பது அவர் செய்ததை தொடர்வதுதான். ஒரே நேரத்தில் ஒரு ஹீரோயிச மாஸ் படமும் இயக்குனரின் படமாக ஒன்றையும் தயாரிப்பது அவரது பாணி. எனவே கவிதாலயா நிறுவனம் அது போலவே தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே புஷ்பா கந்தசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். "கவிதாலயாவின் டிஜிட்டல் படைப்பை அறிமுகம் செய்ய தனி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இப்போது கரு.பழனியப்பன் அன்புடன் கேட்டுவிட்டதால், இதை இங்கே அறிவிக்கிறோம்" என்றார்.          

 

 

தமிழ் சினிமாவில் நூறு படங்களுக்கு மேல் இயக்கி வெற்றிகரமாகவும் பல புதுமைகளை செய்தவராகவும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பெரிய ஆளுமைகளை வடித்தவராகவும் திகழ்ந்த பாலச்சந்தர், டிவியின் ஆரம்ப கட்டத்திலேயே அதிலும் இறங்கி பல சூப்பர்ஹிட் தொடர்களைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.         

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.