Skip to main content

தனுஷ் தொடர்பான வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றம்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

dhanush madurai kathiresan case investigation Change to another session

 

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  

 

இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயல்வதாகவும் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளைப் பெற்றுவிட்டதாகவும் கூறி தனுஷுக்கும் கஸ்தூரிராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு இந்தக் குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்கு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்த விதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர். 

 

அதன் பிறகு கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்த வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார். தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு எண் எதுவுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்புடையது அல்ல. 

 

தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. 

 

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் தனுஷின் உடலில் மச்சங்கள், தழும்புகள் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளராகப் பணியாற்றினேன். இதனால் இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியாக இருக்காது. அதனால் இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்" என உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.