பிரபல மலையாள நடிகையான சரண்யா சசி, ‘சோட்டா மும்பை’, ‘தலப்பாவு’, ‘மரியா காலிப்பினலு’ உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்குக் கடந்த 2012ஆம் ஆண்டு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்த சரண்யா சசி, தற்போதுவரை 11 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார்.
சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துவந்தார். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டபோதிலும், அவருக்கு நிமோனியா பாதிப்பு தீவிரமானது. மேலும், அவருக்கு ரத்தத்தில் சோடியம் அளவும் வெகுவாக குறைந்தது. அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 9 ஆண்டுகாலமாக புற்றுநோயுடன் போராடிவந்த சரண்யா சசிக்கு பெரிய அளவில் பொருளாதாரச் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திரைத்துறை பிரபலங்கள் பலரும் சரண்யா சசியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.