Skip to main content

“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
 

sidharth

 

 

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் இரண்டு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றிவிட்டனர். இந்த புதிய மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்.. அதில், “எனது மாநிலத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்.  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததின் மூலம்  எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான நிறத்தையும், அவரது நேர்மையையும், அதிகார பலத்திற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவர் என்பது தெரிகிறது. இவை அனைத்திற்கும் உங்களுடைய அரசு பொறுப்பு, அதுவரையில் தற்காலிக அதிகாரத்தை அனுபவையுங்கள். 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக ஆதரித்திருக்க மாட்டார். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் அதிமுகவின் கொள்கையை எப்படி மாற்றியது” என்று பதிவிட்டார். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த,  அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளம்பரத்திற்காக சில நடிகர்கள் இவ்வாறு கேள்வி கேட்பார்கள் என்று தெரிவித்தார்.

தற்போது இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சித்தார்த், “அவர் நான் யார் என்று கேட்கிறார். கவலையில்லை. அவருடைய அரசு தான் எனக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதளிப்பதாக சொன்னது. இதனை கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை விருது வழங்கவில்லை.

எனக்கு விளம்பரத்துக்காக பேச வேண்டிய தேவையில்லை. நான் எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன். நேர்மையாக எனது சொந்த முயற்சியால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்