Skip to main content

டிராஃபிக் ராமசாமிக்கு நேர்ந்த துயரம்!   

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

சமூக ஆர்வலர், செயல்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், பேனரைக் கிழித்தார், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார், தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார், பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்... என செய்திகளில் நாம் தினந்தோறும் பார்ப்பதுண்டு. அப்படி நம் செவியில் அவ்வப்போது அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த டிராஃபிக் ராமசாமி யார், என்ன செய்தார் என்பதை சொல்ல வருவதாகத்தான் நம்பினோம் இந்த 'டிராஃபிக் ராமசாமி' திரைப்படத்தை. என்ன சொல்லியிருக்கிறது, பார்ப்போம்.

 

traffic ramasami



டிராஃபிக் ராமசாமியின் சுயசரிதைப் புத்தகம் வெளியிடும் விழாவுடன்  படம் தொடங்குகிறது. அந்தப் புத்தகத்தில் இவருடைய அனுபவங்களை  ஒரு சர்ப்ரைஸ் நடிகர் வாசிக்கிறார். டிராஃபிக் ராமசாமியாக நடித்திருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவி, மகன், மகள், பேத்தி என மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்பது, போராட்டத்தில் குதிப்பது, வழக்குத் தொடர்வது என சமூக பிரச்சனைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சாலையில் பான்பராக் போட்டு எச்சில் துப்பும் நபர் முதல் போலீஸ் ஸ்டேஷனில் தவறான செயலில் ஈடுபடும் பெண் இன்ஸ்பெக்டர் வரை அனைவரையும் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தருகிறார்.

 

 


இப்படிப்பட்ட டிராஃபிக் ராமசாமி தொடரும் ஒரு வழக்கில் எம் எல் ஏ, மேயர், அமைச்சர் என அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் கோபமடைந்த அவர்களால் டிராஃபிக் ராமசாமியின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. அதிலிருந்து தப்பித்தாரா, வழக்கு என்ன ஆனது என்பதே ஒரு நிஜ போராளியின் நீளமான பயணத்தை சுருக்கமாக சொல்ல முயன்றிருக்கும் நிழல் 'டிராஃபிக் ராமசாமி'.

  sac vijay antony



டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்திற்கு எஸ்.ஏ.சி கணகட்சிதமாக பொருந்தியுள்ளார். நிஜ டிராஃபிக் ராமசாமி பட்ட கஷ்டங்களை சந்தித்த சவால்களை நம் கண் முன் கொண்டுவர நன்றாகவே முயற்சி செய்துள்ளார். போலீசாரிடம் அடி வாங்குவது, மனைவி, பேத்தி என பாசத்தில் உருகுவது என நடிப்புக்கு நியாயம் செய்கிறார். கமர்ஷியல் அம்சத்திற்காக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.கே.சுரேஷ் பாத்திரத்தில் அவர் முதலில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக மாறி எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிராஃபிக் ராமசாமியின் மனைவியாக வரும் ரோகிணி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அனுதாபம் பெறுகிறார்.

 

 


இவர்கள் தவிர விஜய்சேதுபதி, குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், மனோபாலா, பிரகாஷ்ராஜ், அம்பிகா, இமான் அண்ணாச்சி, மோகன்ராமன், மதன்பாப், லிவிங்ஸ்டன் என தங்களால் முடிந்த அத்தனை பேரையும் படத்தில் கொண்டுவந்து இது சற்று சக்தி வாய்ந்த  டிராஃபிக் ராமசாமி என்று உணர்த்தியுள்ளார் இயக்குனர் விக்கி. ஆனால், இவர்களால் படத்திற்கு என்ன பலன் என்பது கேள்வியாக மட்டுமே இருக்கிறது. எஸ்.வி.சேகர் நீதிபதியாக நடித்திருப்பது அரசியல் பகடியா, நகை முரணா, யதார்த்தமாக நடந்ததா தெரியவில்லை.

  rohini traffic ramasami



85 வயதிலும் அயராத தொடர்ந்து தமிழக மக்களின் அநீதிகளுக்கு எதிராகப் போராடி வரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய வழக்குகளை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் புதுமுக இயக்குனர் விக்கி. ஆனால், காட்சிப்படுத்திய விதம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எத்தனை வன்மையான எதிர்ப்புகள், தாக்குதல்கள், ஆபத்துகள் இருந்திருக்கும்? அவை எதுவுமில்லாமல் கமர்சியல் திரைப்படமாக உருவாக்க முயன்று அந்த வகையிலும் சற்று சறுக்கியிருக்கிறார் இயக்குனர். அதிலும் அனல் பறந்திருக்க வேண்டிய நீதிமன்ற காட்சிகளைக் கூட காமெடி காட்சிகளாக ஆக்கியிருப்பது, குத்துப் பாடல் வைத்தது, அவருக்கு வரும் 'மாஸ்'(?) பின்னணி இசை வைத்தது என பல விஷயங்கள் ஏற்கனவே உடல் வழு குறைந்திருக்கும் நிஜ டிராஃபிக் ராமசாமிக்கு ஏற்பட்டிருக்கும் துயரம் என்றுதான் சொல்ல வேண்டும். இதெல்லாம் சேர்த்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்று இயக்குனர் காரணம் சொன்னால், அவர் ஜோக்கர், மெட்ராஸ், அறம் போன்ற படங்களைப் பார்க்கவேண்டும். தமிழ் சினிமா ரசிகர்கள் மாறி பல காலம் ஆகிவிட்டது விக்கி.

பாலமுரளியின் இசையில் பின்னணி இசையும் (சில இடங்களைத் தவிர்த்து), 'சோர்ந்திடாதே' பாடலும் நலம். குகன் பழனியின் ஒளிப்பதிவில் சென்னையின் பரபரப்பு  நன்றாகவே பதிவாகியுள்ளது.

 

 


நிகழ்காலத்தில் வாழும் ஒருவருடைய கதையை, நன்கு அறியப்பட்ட அவருடைய பெயருடனே படமாக உருவாக்கும்பொழுது உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம், அல்லது முழுமையாக கற்பனையாக சென்றிருக்கலாம். இரண்டுமல்லாமல் இருப்பது படத்தை சீரியஸாகக் கருதவிடாமல் தடுக்கிறது.

டிராஃபிக் ராமசாமி... நிஜம் குறைவு! 




 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞரை நினைத்த நேரத்தில் சந்தித்தேன்; ஸ்டாலினுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறேன் - ‘கலைஞரும் நானும்’ எஸ்ஏசி நெகிழ்ச்சி!

Published on 07/10/2021 | Edited on 08/10/2021

 

ீ

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர், புரட்சி கரு்துக்களை தன்னுடைய திரைப்படம் வாயிலாக தெரிவித்தவர், நடிகர் விஜய்யின் தந்தை என்ற பன்முக அடையாளத்தைக் கொண்டிருப்பவர் எஸ்.ஏ. சந்திரசேகர். எம்ஜிஆர் ஆட்சியில் கலைஞருடன் இருந்து பல படங்களில் பணியாற்றியவர். கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் அரசின் எதிர்ப்பை சம்பாதித்தவர். அதிமுக ஆட்சியில் ‘தலைவா’ படத்துக்கு விஜய் சந்தித்த எதிர்ப்பை, 40 ஆண்டுகளுக்கு முன்பே தன் படத்திற்கு எம்ஜிஆரிடம் இருந்து அந்த எதிர்ப்பை பார்த்தவர். இந்த நிலையில், கலைஞருக்கும் அவருக்கும் இடையேயான தொடர்பு, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவரிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் தடாலடி பதில்கள் வருமாறு,

 

எம்ஜிஆர் இருந்த காலத்திலேயே திமுக முன்னாள் தலைவர் கலைஞருடன் மிக நெருக்கமாக இருந்தீர்கள். தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி தலைமையுடன் அதே தொடர்பில் இருக்கிறீர்களா? 

 

கலைஞருடன் எனக்கு இருந்த நட்பு என்பது சினிமாவையும் தாண்டியது. வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்றாக எனக்கு மூன்று படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். எங்கள் உறவு என்பது அரசியலையும் தாண்டியது. இத்தனை படங்களில் பணியாற்றினாலும் அவர் என்னிடம் ஒருமுறை கூட அரசியல் தொடர்பாக பேசியதில்லை. கலைஞரிடம் இருக்கும் மிக முக்கிய சிறப்பம்சம் என்றால், அவர் நட்புக்கு தருகின்ற முக்கியத்துவம். அவருடைய கடைசி காலம் வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் நடப்பு பாராட்டினார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தார். அந்த வகையில் கலைஞருக்கு நிகரான ஒருவர் அரசியலில் இல்லை என்றே கூறலாம். 

 

எப்போது அவரை பார்க்க வேண்டும் என்றாலும் முன் அனுமதி பெறாமல் செல்லாம். ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு வாரத்திற்கு முன் அனுமதி கேட்க வேண்டும், அவர்கள் சொல்கிற நேரத்துக்குச் சென்று, அவர்கள் அழைக்கும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு முற்றும் நேர் மாறான தன்மையுடைவர் கலைஞர். திடீர் என்று கலைஞரை பார்க்க வேண்டும் என்றால், சண்முகநாதனுக்கு ஒரு ஃபோன் போட்டு, கலைஞரை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். அவர், “என்னய்யா திடீர்னு இப்படி சொல்ற, நிறைய அப்பாயிண்மெண்ட் தலைவருக்கு இருக்கே” என்பார். நான், “அண்ணே வீட்டுக்கு வரேன், கலைஞரை முடிந்தால் பார்க்கிறேன், இல்லை என்றால் போகிறேன்” என்று சொல்வேன். கலைஞர் வீட்டிற்குச் சென்ற உடன் அவர், கலைஞரிடம் போய் சொல்வார். மிக சில நிமிடத்திலேயே அவர் என்னை அழைப்பார். என்ன உதவி என்றால் அந்த ஸ்பாட்டிலேயே செய்வார். 

 

அந்த விதத்தில் அவரை யாரும் ஓவர்டேக் செய்ய முடியாது. மிக அன்பாக நண்பர்களைப் பார்த்துக்கொள்வார். அந்த வகையில் என் வயதுக்கு கலைஞருடன் பேசுவது என்பது மிக எளிதாக இருந்தது. தற்போது ஸ்டாலின் சார் மிக நல்ல முறையில் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். நண்பர்கள் மட்டத்தில் பேசும்போது அதே கருத்தைத்தான் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதிக்கு அடுத்த நாளே வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்தேன். என்ன இருந்தாலும் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். கலைஞரை சந்திக்க வேண்டும் என்றால் ஒருமுறை அனுமதி கேட்டால், சில நாட்களிலேயே நம்முடைய தொலைபேசிக்கு கூப்பிட்டு இந்த நாளில் வர வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்டு 6 மாதம் ஆகிறது. இதுவரை கிடைக்கவில்லை. 


அரசியல் தலைவருடன் நிறைய பழகியிருக்கிறீர்கள், உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? தீவிர அரசியலுக்கு வருவீர்களா, வாய்ப்பிருக்கிறதா? 

 

இந்த வயதில் நான் ஏன் இனி அரசியலுக்கு வரப் போகிறேன். அந்த மாதிரியான அரசியல் ஆசை தற்போது வரை இல்லை. நீங்கள் கூறியது போல் எம்ஜிஆரை எதிர்த்தே கலைஞருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தேன். ஒருமுறை கலைஞரை எம்ஜிஆர் ஆட்சியில் கைது செய்தபோது, அதைக் கண்டித்து 'நீதிக்கு தண்டனை' என்ற பெயரில் கலைஞர் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்று ஒருபக்க அளவில் செய்தித்தாளில் விளம்பரம் அளித்தேன். அப்போதே நான் யாருக்கும் பயப்படவில்லை. அந்த நேரத்தில் நான் இயக்கியிருந்த ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளியாகியிருந்தது. படம் நல்ல முறையில் போனதை அடுத்து, நான் காஷ்மீருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றேன். திடீரென காஷ்மீர் போகிற வழியில் டெல்லியில் தங்கிருந்தபோது சண்முகநாதனிடம் இருந்து ஃபோன் வருகிறது. “எங்கயா இருக்க,” என்றார். நான் “டெல்லியில் இருக்கேன்” என்றேன். “இங்கே பத்தி எரியுது, டெல்லியில இருக்கியா! கலைஞர் பார்க்கனும்னு சொல்றார், உடனே வா” என்றார். நான் வருவதற்குள் என் படத்தை தடை செய்ய மாநில அரசு முயன்றதும், அதற்குள் கலைஞர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்ததும் எனக்குத் தெரிந்தது. எனவே அப்போதே எல்லா அரசியலையும் நான் பார்த்திருக்கிறேன். 

 

 

Next Story

"தம்பிகளுக்கு வழிவிடுங்கள் என்று நான் எதற்காக பேசினேன்.."? - சீக்ரெட்டை உடைத்த எஸ்.ஏ.சி!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

k

 

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் கமலின் 60ம் ஆண்டு திரைவிழாவில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர், " முதலில் ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துவிடுங்கள், பிறகு தம்பிகளுக்கு வழிவிடுங்கள்" என்று கூறியிருந்தார். அவரின் அந்த பேச்சு அடுத்த சில வாரங்களுக்குத் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளானது. இந்நிலையில் இதுதொடர்பாக அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய இந்த கேள்விக்கு அவரின் எதார்த்தமான பதில் வருமாறு, " நான் அந்த விழாவில் அப்படி பேசியது உண்மைதான். ஆனால் எதற்காக பேசினேன் என்று பார்க்க வேண்டும். காமராஜருக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் சினிமாவை பின்புலமாகக் கொண்டவர்கள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்து வருகிறார்கள். அந்த வகையில் அது எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் தான் அப்படிக் கூறினேன்.

 

ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இதை விஜய்யை மனதில் வைத்துக் கூறினேனா என்று கேட்கிறீர்கள், அப்படி இல்லை, அனைத்து ஜூனியர் தம்பிகளும் களத்திற்கு வரத் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் நான் சினிமாக்காரன். எதார்த்தமாக யோசிக்கக்கூடியவன். அந்த வகையில் ரஜினியும், கமலும் வந்தால் அவர்கள் வழியில் அடுத்து அவர்கள் தம்பிகளும் அதே வழியில் பயணிப்பார்களே என்ற ஆசையில் வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. விமர்சனம் செய்பவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மனதில் தோன்றியதைக் கூறினேன், அவ்வளவுதான். இடைவெளி விழுந்தாலும் சினிமா நண்பர்கள் அந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறேன்" என்றார்.