Skip to main content

ஹெச்.ராஜா, ஓபிஎஸ் முதல் மோடி வரை... தமிழ்ப்படம் செய்தது என்ன? தமிழ்ப்படம் 2 விமர்சனம் 

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

அஜித், விஜய் இருவரில் யாரை அதிகம் கலாய்த்திருக்கிறது தமிழ்ப்படம்2? கடைசியில் பார்ப்போம்.

 

tamizhpadam



கடந்த 2010ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் வெளியான ஒரு டிரைலர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில நிமிடங்களே ஓடக்கூடிய அந்த டிரைலரில் எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து சிம்பு, தனுஷ் வரை அனைவரது படங்களையும் கலாய்த்துத் தள்ளி ரசிக்க வைத்த அந்த டிரைலர் 'தமிழ்ப்படம்' என்ற படத்தின் டிரைலர். அதுவரை சில படங்களில் ஓரிரு காட்சிகள் ஸ்பூஃபாக வந்திருந்தாலும் ஒரு முழு நீள  படமாக 'ஸ்பூஃப்' என்ற வகையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது, வெற்றியும் பெற்றது. அனைத்து படங்களையும் கலாய்த்து ரசிகர்களை மகிழ்வித்த தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் முன்பே விளம்பரங்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி புகழ் பெற்ற நடிகர்களுக்கிணையான ஓப்பனிங்குடன்   வந்திருக்கும் இயக்குனர் சி.எஸ்.அமுதனின் 'தமிழ்ப்படம் 2' - போலீஸ் அத்தியாயம் அனைவரையும் மீண்டும் மகிழ்வித்ததா?

 

 


முதல் பாகத்தில் 'டி' என்ற வில்லனாக வரும் தன் பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வரும்போது சிவா தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்வது போல் படம் முடியும். அதன் பிறகு சிவா சாதாரண வேலை செய்து வருகிறார். இதற்கிடையே மதுரையில் நடக்கும்  கலவரத்தைக் கட்டுப்படுத்த சிவாவால்தான் முடியும் என காவல்துறை அவரை நாடுகிறது. சிவாவும் கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே பிரச்சனையை தீர்க்கிறார். இதைப்பார்த்த காவல்துறை அவரை மீண்டும் பணிக்கு அழைக்கிறது. அதற்கு சிவா மறுக்கும் நேரம் பார்த்து அவர் மனைவியை பாம் வைத்து கொன்றுவிடுகிறார் வில்லன் 'பி'. இதனால் கோபமடைந்த சிவா மீண்டும் போலீசில் சேர்ந்து 'பி' யை பழிவாங்க செய்யும் முயற்சியில் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதே இந்தத் தமிழ்ப்படம்.

  tamilpadam heroine



கதை என்பது பெயருக்குத்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. காட்சிகள்தான் இதில் முக்கியம், நமக்கு நன்கு தெரிந்த, சூப்பர்ஹிட் படங்களின் காட்சிகளை, நம் ஆதர்ச நாயகர்கள் போலவே நடித்து, கலாய்த்து கைதட்டல் பெற முயற்சி செய்து கிட்டத்தட்ட வென்றிருக்கிறார்கள். பழைய காட்சிகளைக் கோர்த்து இந்தக் கதைக்கேற்றவாறு உருவாக்கும் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார் சி.எஸ்.அமுதன். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால், சிம்பு என நீண்டுகொண்டே செல்லும் கலாய் பட்டியல், தமிழைத் தாண்டி டெர்மினேட்டர், ஃபாரஸ்ட் கம்ப் என ஆங்கிலப் படங்களுக்கு சென்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆங்கில வெப் சிரீஸ் வரை வெறித்தனமாக சென்றிருக்கிறது.

 

 


இடையில் அரசியலையும் சேர்த்திருப்பது இரண்டாம் பாகத்தில் எக்ஸ்ட்ரா காம்ப்ளிமென்ட். ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம், ஹெச்.ராஜாவின் பேச்சு, சசிகலா பதவியேற்பு  என அரசியல் பக்கமும் தைரியமாக விளையாடியிருப்பதைக் கண்டிப்பாக பாராட்டலாம். பிரதமர் மோடிவரை சென்றிருக்கிறார்கள். ஆனால், விளம்பரங்களில் வந்த பதினைந்து லட்சம்-ஜி.எஸ்.டி காட்சியைப் படத்தில் காணவில்லை. இத்தனையையும் தடை போடாமல் அனுமதித்த, வெளியே சொல்லி பிரச்சனைகளைக் கிளப்பாத சென்சார் குழுவையும் பாராட்ட வேண்டும். காட்சிகளின் பின்னணியில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும், விஷயத்திலும் நம்மை சிரிக்கவைக்க ஏதோ ஒன்று இருப்பது சிறப்பு. மாஸ் ஹீரோக்களை கலாய்ப்பதோடு, பட ரிலீஸ் அன்றே சக்ஸஸ் மீட் வைப்பது, பெண்களைத் திட்டிப் பாடுவது போன்ற சினிமா வழக்கங்களையும் கிண்டல் செய்திருக்கிறார் அமுதன்.

  sathish



'அகில உலக சூப்பர் ஸ்டார்' என அறிமுகம் செய்யப்படும் சிவா முதல் பாகத்தை போலவே இப்படத்திலும் கலக்கியிருக்கிறார். ரஜினி முதல் விஷால் வரை அவர் கலாய்க்க எடுக்கும் ஒவ்வொரு அவதாரங்களும் சிரிப்பை உண்டாக்கத் தவறவில்லை. சிவாவின் கரியரில் இது ஒரு முக்கியமான படம். அவருக்கு நடிக்கத் தெரியாது என்று படத்திலேயே கூறுகிறார். அதுதான் இந்தப் படத்திற்கு தேவையுமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் அந்த நடனப் போட்டியில் அரங்கம் உண்மையிலேயே சிரிப்பில் அதிர்கிறது. ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு அழகு. படத்தில் அவருக்கு பல நாயகிகள் போலவே வந்து செல்லும் வேலை. அந்த வேலையை சரியாக செய்துள்ளார். காதல் தோல்வியில் மது அருந்திவிட்டு நண்பர்களோடு ஆடுவது ROFL.

வில்லன் 'பி' யாக வரும் சதிஷின் கெட்டப்புகள் நம்மை சிரிக்க வைத்தாலும் அவர் நம்மை சிரிக்கவைக்கவில்லை. சிவாவின் முன் அவர் தொய்வாகவே இருக்கிறார். அந்த நடனப் போட்டியில் மட்டும் அவரது பெர்ஃபார்மன்ஸ் நச். இவர்களுக்கு அடுத்து நம்மை கவனிக்கவைப்பது சேத்தன். சீரியஸ்  நகைச்சுவையை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த முறை நண்பர்களாக வரும் மனோபாலா, சந்தான பாரதி,  ஆர்.சுந்தர் ராஜன் மூவரில் சந்தான பாரதி மட்டும் ஓரிரு இடங்களில் சிரிக்கவைக்கிறார். மற்றவர்களுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. இவர்கள் போக கலைராணி, திஷா பாண்டே, நிழல்கள் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர் என பலரும் இருக்கிறார்கள்.

 

 


படத்தில் சில விஷயங்களை வைத்தே ஆக வேண்டும் என்று வைத்து படத்தின் நீளம் அதிகமாகியிருக்கிறது. இரண்டாம் பாதி தொய்வடைந்து நீளத்தை உணர வைக்கிறது. சிவா என்டர்டைன் செய்யும் அளவுக்கு வில்லன் சதீஷின் பாத்திரம் செய்யவில்லை. தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய பல காட்சிகள் இருப்பது ஒரு சவால். சாதாரண சினிமா ரசிகருக்கு பல காட்சிகள் புரியாமல் இருக்க வாய்ப்பு அதிகம். புகழ் பெற்ற காட்சிகளை பிரதிபலிக்கும்போது அந்தக் காட்சிகளின் தாக்கத்தில்தான் சிரிப்பு வருகிறது. இவர்களின் க்ரியேட்டிவிட்டி காமெடியிலும் குறையாகவே இருக்கிறது. கஸ்தூரி ஆடும் அந்த நடனம் சற்று அயர்ச்சி.

  friends



கண்ணனின் பின்னணி இசை பாராட்டப்பட வேண்டியது. பிரபலமான இசையை அப்படியே போடாமல் அதைப் போலவே, அதுவும் ரசிக்கும்படி அமைத்ததற்கு லைக்ஸ். பாடல்களும் கலாய்க்கவேண்டுமென்ற நோக்கத்திற்காக போடப்பட்டதால் அந்த வேலையை மட்டும் செய்திருக்கின்றன. பெரிய  கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்தை தரமானதாகக் காட்டியிருக்கிறது. ஸ்பூஃப் படமென்பதால் அதை வைத்து மட்டுமே ஓட்டிவிடலாம் என்ற எண்ணம் இல்லாமல், மேக்கிங் தரமாக செய்திருப்பது சிறப்பு.

தமிழ்ப்படம் 2 - இதுதான் இருக்கும் என்று தெரிந்து செல்லும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்ஜாய்மென்ட், எப்போதாவது படம் பார்ப்பவர்களுக்கு எக்ஸாமினேஷன்.

அஜித்தா விஜயா... இருவரில் இந்த முறை அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது அஜித்தான்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ் சினிமா தொடாததைத் தொடும் மலையாள சினிமா! சரியா? தவறா?

Published on 05/06/2021 | Edited on 05/06/2021
biriyani malayalam movie

 

பிரிக்க முடியாதது... அரசியலும் சினிமாவும்! - இது தமிழகத்துக்குப் பொருந்தும். ஆனால் கேரளத்தில் இந்த வாசகம் பொருந்தாது. அங்கு சினிமாக்காரர்கள் பெரிதாக அரசியல் பேசுவதில்லை, அரசியலில் நுழைந்தாலும் பெரிய வெற்றி பெறுவதில்லை. ஆனால், சினிமாவில் பேசப்படும் அரசியல், அரசியல் பேசும் சினிமாக்கள் என்னும் தலைப்பை எடுத்தால் தமிழகம், கேரளம் இரண்டிலுமே தொடர்ந்து பல படங்கள் இந்த வகையில் வெளியாகின்றன. ஆனால், பேசப்படும் விதம் என்பது இரண்டு மொழிகளிலும் மாறுபடுகின்றன. அந்தந்த மாநிலங்களின் அரசியல் தன்மை, சூழலுக்கு ஏற்றதுபோல மாறுவது இயற்கைதான்.

 

தமிழ் திரைப்படங்களில் ஆரம்பத்தில் தேசிய அரசியல், பிறகு திராவிட அரசியல், பொதுவுடைமை அரசியல் என காலம்தோறும் படங்களில் அரசியல் பரிணமித்து வந்தது. தொண்ணூறுகளில் அரசியல் படங்கள் என்றாலே லஞ்ச ஊழலுக்கு எதிரான காட்சிகளை வைத்து நடுத்தர மக்கள் பார்வையிலிருந்து வசனங்களை வைத்து மேலோட்டமான அரசியலை பேசும் படங்கள் என்றாகின. சாதி அரசியல் பேசும் படங்கள் அவ்வப்போது வந்தாலும் அவை ஒரு பக்கத்திலிருந்து எழுதப்பட்டு எடுக்கப்பட்ட படங்களாக பெரும்பாலும் இருந்தன. ஈழ அரசியல் பேசிய பல படங்கள், சரியாகப் பேசாததால் எதிர்ப்பை சம்பாரித்தன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக மீண்டும் தமிழ் படங்களில் ஆழமான அரசியல் பேசும் படங்களும் அரசியல் சரித்தன்மையுடன் பேசும் படங்களும் வரத்தொடங்கியுள்ளன. முக்கியமாக ஜனநாதன், ராஜு முருகன், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வருகைக்குப் பிறகு இது நடந்துள்ளது. அதே நேரம் அரசியல் சரித்தன்மையை காக்க வேண்டியும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டியும் தமிழ்த் திரையுலகால் தொடப்படாத சில இடங்கள் உள்ளன. அந்த இடங்களை எளிதாகத் தொட்டுப் பேசி விளையாடி அதை விவாதமாக்குவது மலையாள சினிமாவின் வழக்கம். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது 'நாயாட்டு'.

 

trance fagath fazil

 

வேட்டை என்று அர்த்தப்படும் 'நாயாட்டு' என்ற டைட்டிலுடன் வந்திருக்கும் இந்தப் படத்தில் அரசியல் - அதிகார கூட்டணியால்  வேட்டையாடப்படுவது மூன்று போலீஸ்காரர்கள். இந்த கதைக்கருவே நமக்கு முரணாக இருக்கிறதல்லவா? அதிகாரமே அவர்களிடம்தான் இருக்கிறது? அவர்களை யார் வேட்டையாடுவது என்று கேட்கிறோமல்லவா? அவர்களை வேட்டையாடும் அரசியல் எது என்று தெரிந்தால் இந்த முரண் இன்னும் அதிகமாகும். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான பெண் போலீசை அவரது உறவினரான இளைஞன் தொல்லை செய்கிறான். இதற்காகக் கைது செய்யப்படும் அவன், தான் சார்ந்த தலித் அரசியல் இயக்கத்தின் அதிகாரத்தால் உடனே வெளியே வருகிறான். அவனுக்கும் இன்னும் இரண்டு போலீஸ் பாத்திரங்களாக வரும் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன் இருவருக்கும் நடக்கும் பிரச்சனை விபரீதமாக முடிய பெண் போலீஸான நிமிஷா உள்பட மூன்று போலீஸ்காரர்களும் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். படத்தில் தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடு, வாக்கு வங்கி தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்றவை சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவைதான் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன. விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்திருப்பது தமிழ் சமூக ஊடக சூழலில்தான். கேரளத்தில் 'இது நடக்காததா? இப்படியும் நடக்கத்தானே செய்கிறது? அதையும் பேசலாம்...' என்று கேசுவலாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் சேட்டன்கள்.

 

தலித் அமைப்புகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவாகிய கட்சிகள் மெல்ல வளர்ந்து அரசியலில் முன் வரிசைக்கு வரும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் உண்டாகக்கூடிய விளைவு என்பது கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதே நேரம் இந்தப் படம் கேரள அரசியல் சூழலுக்கு எழுதப்பட்ட ஒன்று, அதை நமது அரசியல் பார்வையில் பார்த்து விமர்சிக்க வேண்டியதில்லை என்கின்றனர் சில சினிமா, அரசியல் பார்வையாளர்கள். உண்மைதான், மலையாளத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழில் எடுக்கப்பட சாத்தியமில்லாதவை. ஃபகத் ஃபாசில் நடித்த 'ட்ரான்ஸ்', கடந்த ஆண்டு வெளியான திரைப்படம். கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை ஒரு மிகப்பெரிய தொழிலாக, ஏமாற்று வேலையாக ஒரு அமைப்பு செய்வதையும் அதனால் பலர் ஏமாறுவதையும் பாதிக்கப்படுவதையும் மிக விரிவாக, வெளிப்படையாகக் காட்டியிருந்தது 'ட்ரான்ஸ்'. இந்தப் படம் வெளிவந்த போது கேரளத்திலேயே எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் வெளியீட்டில் தடை, போராட்டம் என்று பெரிதாகவில்லை.

 

great indian kitchen

 

கடந்த ஆண்டு வெளியான இன்னொரு மலையாள படமான 'பிரியாணி', மத அடிப்படைவாத, தீவிரவாத இயக்கங்களின் மூளைச் சலவைக்கு பலியாகி தனது குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒரு இசுலாமிய இளைஞனின் செயலால் அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசியிருந்தது. சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் அந்தப் பெண் சமூகத்தை திருப்பித் தாக்க தேர்ந்தெடுக்கும் வழி நம்மை அதிர வைக்கிறது. இதுவும் கொஞ்சம் பிசகினாலும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ள ஒரு கதைக்கரு. இந்தப் படம் வெகுவாகப் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. முக்கிய பாத்திரத்தில் நடித்த பெண்ணான கனி குஸ்ருதி அங்கு கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் வெளிவந்து தமிழ் சூழலில் விவாதத்தைக் கிளப்பிய இன்னொரு மலையாளப் படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்திய பெண்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் அநீதியை மிக இயல்பாக சொல்லியிருந்தது. படத்தின் சிறப்பே, ஒரு வன்முறையாக, கொடுமையாக அல்லாமல் மிக இயல்பாக பெண்களே ஏற்றுகொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வு குடும்பம் என்னும் அமைப்பில் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை சொல்லியதுதான்.

 

மலையாளத்தில் நமது சர்கார், முதல்வன், மக்களாட்சி ஸ்டைல் நாயகத்தன்மை நிறைந்த கமர்ஷியல் அரசியல் படங்களும் வருகின்றன. அவர்களின் ஃபேவரிட்டான இடது சாரி நாயகனைக் கொண்ட படங்கள் அவ்வப்போது வருகின்றன. மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற 'லூசிஃபர்' அப்படியொரு படம்தான். தமிழகத்தில் 2016-17இல் நிலவிய அரசியல் சூழலை பிரதிபலிப்பதுபோல இருந்தது இப்படம். ஒரு பெரிய அரசியல் தலைவர் மறைய அவரது இடத்துக்கு நடக்கும் போட்டி, அரசியல் சதுரங்கம்தான் கதை. விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்திருந்தது லூசிஃபர். சமீபத்தில் மம்மூட்டி நடித்திருந்த 'ஒன்' திரைப்படத்தில் 'சரியாகப் பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் சட்டம் கொண்டுவர வேண்டும்' என்பதுதான் மையம். இப்படி மலையாளத்தில் பல விதமான அரசியல் படங்கள் வெளியாகின்றன. ஒரே விசயம் கொண்டாடப்படுவதும் கிண்டல் செய்யப்படுவதும் அங்கு சாதாரணமாக நிகழ்கின்றன. அதற்கான வெளி அங்கு இருப்பது நேர்மறையான விஷயம். பேசாப் பொருள்கள் அனைத்தும் பேசப்படவேண்டும் என்பது முக்கியம், அது தவறாகப் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதும் மிக முக்கியம்.  

 

                                                                     
 

Next Story

விஜய் உடன் கிரிக்கெட் வீரர் - வைரலாகும் புகைப்படம்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020


கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி, நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நடப்பு ஐ.பி.எல் ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், சுழற்பந்து வீச்சாளர். அவருக்கு கிரிக்கெட் மீதான காதலை தாண்டி நடிகர் விஜய் என்றால், கொள்ளை பிரியம். இந்நிலையில், இன்று நடிகர் விஜயை சந்தித்துப் பேசிய அவர், புகைப்படம் ஒன்றை அவருடன் இணைந்து எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.