Skip to main content

மீண்டுமொரு கேஜிஎஃப்பா? - ‘சலார்’ - விமர்சனம்!

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
salaar movie review

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கே.ஜி.எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நாயகன் பிரபாஸ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் பேன் இந்தியா திரைப்படம் சலார். பாகுபலி, கே.ஜி.எஃப் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறச் செய்தது. அந்த பிரம்மாண்ட எதிர்பார்ப்பை சலார் திரைப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா?

உயிருக்கு உயிரான நண்பன் மீது அளவு கடந்த பாசம். தன்னைப் பெற்ற தாய் மீது அதீத பாசம். இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் யார் பக்கம் சலார் பிரபாஸ் நிற்கிறார் என்பதே சலார் பட முதல் பாகத்தின் கதை. இந்தியாவில் தன் அம்மாவின் அஸ்தியை கரைக்க வெளிநாட்டிலிருந்து வரும் சுருதிஹாசனை ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்போடு கொலை செய்ய முயற்சி செய்கிறது. அவர்களிடமிருந்து சுருதிஹாசனை காப்பாற்றி பிரபாஸிடம் ஒப்படைக்கிறார் மைம் கோபி. தாய் ஈஸ்வரி ராவின் கட்டளைக்கிணங்க எந்த அடிதடிக்கும் செல்லாமல் சாதுவாக இருக்கும் பிரபாஸ், சுருதிஹாசனை கொல்ல வரும் கொலைகாரர்களை இரண்டு முறை தன் தாயின் உத்தரவோடு அடித்து துவம்சம் செய்து காப்பாற்றி தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறார். இதைக் கேள்விப்பட்ட சுருதிஹாசனை கொல்லத் துடிக்கும் வில்லன் பிரித்விராஜ் கும்பல், பிரபாஸை துவம்சம் செய்ய அவர் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து மிகப்பெரிய புஜபல பராக்கிரமசாலி பிரபாஸ் ஏன் தன் தாயின் கட்டுப்பாட்டிற்குள் சாதுவாக இருக்கிறார்? இவருக்கும் அவருடைய நண்பன் பிரித்விராஜுக்கும் இருக்கும் உறவு என்ன? அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைக்கான காரணம் என்ன? என்பதே சலார் முதல் பாகத்தின் மீதிக் கதை. கே.ஜி.எஃப் தந்த மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றி தந்த உற்சாகத்தோடு சலார் படத்தையும் கே.ஜி.எஃப் போல் அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் முதல் பாகம் போல் ஒவ்வொரு படியாக பில்டப்புகளையும் ஆக்சன் காட்சிகளையும் கூட்டாமல் எடுத்த எடுப்பிலேயே முதல் காட்சியிலிருந்து பில்டப்புகள் கூடிய ஆக்சன் காட்சிகளுடன் அதிரடியாக படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். இது போகப் போக தன் முந்தைய படங்கள் போல் சென்டிமென்ட் ஆக்சன் காட்சிகளோடு கூடிய பிரம்மாண்ட படமாக முதல் பாதி விரிகிறது.

இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் ஆரம்பிக்கிறது. அதில் பிரபாஸுக்கும் பிரித்விராஜுக்குமான நட்பு, பகை, மோதல், அடிதடி சண்டை, பழிவாங்கல் என நீள்கிறது. எங்கெங்கு ஆக்சன் காட்சிகள் தேவையோ அதற்கு ஏற்றார்போல் பில்டப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்களை உருவாக்கி, அதற்கு ஏற்றார்போல் சண்டைக் காட்சிகளையும் பிரம்மாண்டமாக உருவாக்கி படம் முழுக்க ஒரே பில்டப்புகளாக கொடுத்து கே.ஜி.எஃப் வாங்கிய கைத்தட்டல்களை இந்தப் படத்தில் வாங்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். அதற்கு சரியான அளவில் பலன் கிடைத்ததா என்றால்? சற்று சந்தேகமே!

முதல் பாதி படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்தாலும், போகப்போக வேகம் எடுத்து பிரசாந்த் நீலின் பாணியிலேயே படம் நகர்ந்து கைத்தட்டல்களும் விசில்களும் பெற்றது. ஆனால் இரண்டாம் பாதியோ, சற்றே குழப்பமான திரைக்கதையோடு ஆங்காங்கே வரும் காட்சி அமைப்புகள் சரியாக ரசிகர்களிடம் போய்ச் சேராத வண்ணம் பல குழப்பங்கள் நிறைந்து, காட்சி அமைப்புகள் அமைந்து அதை சரிப்படுத்தும் விதமாக கடைசி கட்டக் காட்சிகளில் குழப்பத்திற்கான விடைகளைக் கொடுத்து, ஆக்சன் காட்சிகளோடு இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து படத்தை முடித்துள்ளார். முதல் பாதியில் இருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். குறிப்பாக கேஜிஎப் படத்தில் நாம் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் கைத்தட்டி விசில் அடித்து அதே சமயம் கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ்களை அனுபவித்து, சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ந்து ரசித்தோமோ அவையெல்லாம் இந்த படத்தில் ஆங்காங்கே மிஸ் ஆவது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

இருந்தும் பிரசாந்த் நீலின் ஸ்டைலில் உருவான திரைக்கதையும், பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸும் படத்தை தாங்கிப் பிடித்து ரசிக்க வைத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. எப்பொழுதும் போல் புஜபல பராக்கிரமசாலியாக இந்தப் படத்திலும் திகழ்ந்துள்ளார் ரெபெல் ஸ்டார் பிரபாஸ். பாகுபலிக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு சலார் படம் மூலம் திரும்பி இருக்கிறார் பிரபாஸ். கேஜிஎஃப் கொடுத்த அளவு இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை என்றாலும் பிரபாஸ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து அதையும் ரசிக்கும்படி செய்திருப்பது வரவேற்பைப் பெற்று தியேட்டரில் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. படம் முழுவதும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் பிரபாஸ். வழக்கமான நாயகியாக வரும் சுருதிஹாசன் வழக்கமான நடிப்பை நடித்துவிட்டு வலம் வருகிறார். தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் அவருக்கான வேலையை எப்பொழுதும் போல் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

வில்லன் பிரித்விராஜ் பல காட்சிகளில் மௌனம் மட்டுமே சாதிக்கிறார். போகப் போக வசனம் பேசி இறுதிக் கட்டத்தில் வெடிக்கிறார். இவருக்கான வேலை இரண்டாம் பாகத்தில் நிறையவே இருக்கிறது என்பதை அந்த காட்சி மூலம் காட்டியிருக்கிறார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார் மைம் கோபி. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், கருடா ராம் உட்பட பலர் அவரவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பு சேர்த்து பிரம்மாண்டத்தைக் கூட்டி உள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவில் கேஜிஎப் படம் போல் சலார் படமும் கறுப்பு, வெள்ளை டோனில் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அதனாலேயே படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. குறிப்பாக படத்திற்கான லைட்டிங் அபாரம். ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை கேஜிஎப் படத்தை ஞாபகப்படுத்துகிறது.

கேஜிஎஃப் படம் போல் இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் அதகளப்படுத்தி கைத்தட்டல்கள் விசில்களைப் பெற்றாலும், சென்டிமென்ட் காட்சிகள் ஏனோ மனதைத் தொட மறுக்கிறது. அதேபோல் படத்தின் நீளமும் அதிகமாக இருப்பதால், இரண்டாம் பாதியில் வரும் குழப்பமான காட்சிகள் அயர்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் படத்தின் மேக்கிங், பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸ், பிரசாந்த் நீலின் யூனிக்கான திரைக்கதையும், அதற்கு ஏற்றார்போல் அமைந்த ஆக்சன் காட்சிகளும் படத்தைக் காப்பாற்றி கரைச் சேர்த்திருக்கிறது.

சலார் - பளார்!!

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!