Skip to main content

ரஜினிக்கு காலா, கமலுக்கு விஸ்வரூபம்... என்ன லிங்க் தெரியுமா?   

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 

விஸ்வரூபம் 2 - விமர்சனம்

உமர் (ராகுல்போஸ்) திட்டப்படி அமெரிக்காவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தும் திட்டத்தை உளவுத்துறை அதிகாரியான விசாம் (கமல்ஹாசன்) தன் குழுவோடு முறியடிப்பதும், அதிலிருந்து ராகுல் போஸ் தப்பித்து செல்லும்போது... 'ஒன்னு உமர் சாகணும்.. இல்ல நா சாகணும்... அதுவரை இந்த கத தொடரும்...' என்று கமல் சொல்வது போல் 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் முடிந்தது. தற்போது இதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள விஸ்வரூபம் 2ல் கமல் சொன்னதுபோல் கதை தொடர்ந்ததா? அல்லது முடிந்ததா...? முதல் பாகத்தில் விஸ்வரூபம் எடுத்த கமலின் வேர் என்ன, வந்த வழி என்ன என்பதை விளக்குகிறது விஸ்வரூபம்2.

 

kamal



இந்திய ராணுவத்தில் கைதேர்ந்த முக்கிய அதிகாரியாக இருக்கும் கமல்ஹாசன் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் உள்ளார். கமலிடம் பயிற்சி பெரும் ராணுவ அதிகாரியாக வரும் ஆண்ட்ரியாவும் கமலும், ஒரு நாள் இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பின் இருவருக்கும் பொறுப்புகள் பறிக்கப்படுகின்றன. வெளிஉலகத்துக்குதான் இந்த நடவடிக்கை, ராணுவ ரீதியாக இவர்கள் ரகசிய உளவு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படும் கமல் அல்கொய்தாவில் இணைந்து  பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கச் செல்கிறார். இவரது துரோகம் அறிந்த உமர் மற்றும் அவரது குழுவினர் என்ன செய்தார்கள், அவர்களது அடுத்தகட்ட தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தாரா கமல் என்பதை விஸ்வரூபமாக இல்லாமல் சற்று அமைதி சொரூபமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கமல்ஹாசன்.

 

 


கமல்ஹாசன் வழக்கம் போல் தன் பக்குவமான நடிப்பால் படத்தை மிளிரவைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் சின்னச் சின்ன உணர்வு வெளிபாடுகளிலும் கவனித்து ரசிக்க ஆயிரம் விஷயங்களை வைத்துள்ளார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் இருவருக்கும் கதையிலும் போட்டி, கதாபாத்திரங்களாகவும் போட்டியே. ஆண்ட்ரியா ஆக்ஷனிலும் பூஜா அழகிலும் ஜொலிக்கிறார்கள். முதல் பாகத்தில் கொடூர வில்லனாக அறிமுகமான ராகுல் போஸ் இந்தப் பாகத்தில் கொஞ்ச நேரமே  வந்தாலும் மீண்டும் மிரட்டியுள்ளார். மற்றபடி சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

  kamalhassan viswa



கமல்ஹாசன் வழக்கம் போல் ரசிகர்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் காட்சிகள் மூலம் திரைக்கதை அமைத்துள்ளார். அது எப்போதும் போல் பல இடங்களில் ரசிக்கும்படியாகவும் உள்ளது. நடுநடுவே அரசியல் வசனங்களும், குறியீடுகளும் ஒளிந்திருக்கின்றன. முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால் அதிலிருக்கும் பல காட்சிகள் இதிலும் இருக்கின்றன. சில காட்சிகள் தேவையென்றாலும் சற்று அதிகமாகவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. விஸ்வரூபம் படத்தில் மெய்சிலிர்த்து  கைதட்ட வைத்த பல காட்சிகள் இருந்தன. இதில் அவை மிஸ்ஸிங். காட்சிகளின் கன்டினியூட்டியை (தொடர்ச்சியை) நுணுக்கமாக கடைபிடித்து அசத்தியுள்ளார் கமல். ஸ்பை த்ரில்லரில் தாய் பாசம் வரை சேர்த்திருப்பது சரிதான். ஆனால், ஆக்ஷன் குறைவாக இருப்பது குறையாக இருக்கிறது.

 

andrea



ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் சற்று ஏமாற்றமே.  பின்னணி இசை இன்னும் வீரியத்துடன் இருந்திருக்கலாம்.  சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. மகேஷ் நாராயணன், விஜய் ஷங்கர் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு உதவியுள்ளது. கமல்ஹாசன் படங்களில் தொழில்நுட்ப விஷயங்கள் முதல் தரமாக இருக்கும். ஆனால், இதில் க்ரீன் மேட் காட்சிகளை சாதாரண ரசிகர்களே கவனித்து சொல்லும் அளவுக்கு குறை வைத்தது ஏனோ?

 

 


படத்தின் தொடக்கத்தில் மக்கள் நீதி மய்யம் காணொளி வருகிறது. மக்களிடம் பேச நல்ல வழிதான். படத்திலும் பல அரசியல் வசனங்கள் இருக்கின்றன. ரஜினிக்கு காலா போல, கமலுக்கு விஸ்வரூபம்2. இரண்டுமே அவரவரின் அரசியல் அறிவுப்புக்குப் பின் வந்திருக்கும் படங்கள். இரண்டும் எதிர்பார்த்த விளைவை தந்திருக்கிறதா? கேள்விக்குறிதான்...

விஸ்வரூபம் 2 - விறுவிறுப்பு சற்று குறைவு.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2 வாழைப்பழம் விலை கேட்டு அதிர்ந்து போன விஸ்வரூபம் வில்லன்...

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பன்முக அடையாளம் கொண்டவர். அண்மையில் இவர் சந்தீகருக்கு ஒரு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். அப்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு உடற்பயிற்சி முடிந்து வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், வாழைப்பழத்துடன் வந்த பில் இவருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.
 

rahul bose

 

 

இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து வெளியிட்டுள்ளார் ராகுல் போஸ். 
 

அதில், "நான் சந்தீரில் ஒரு ஜேடபிள்யூ மாரியட் என்கிற ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். அதற்கான ரசீதைப் பாருங்கள்" என்று ரசீதைக் காட்டுகிறார். அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று போடப்பட்டுள்ளது. "இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை" என்று பேசியுள்ளார்.
 

 

 

Next Story

விஸ்வரூபம் 2 படத்துக்காக குமாரசாமியை சந்தித்துள்ளார் கமல்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தச் சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் கமல்ஹாசன் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார்.

 

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனையை விதித்திருக்கிறது. கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சினையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார். காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது.

 

 

 

Viswaroobam 2 film should not be a problem in the film industry




தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றிவிட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம். அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்தவிதமான பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காகவா ?. இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.