Skip to main content

இந்தப் படம் பார்த்தால் சுகர் வருமா? சில்லுக்கருப்பட்டி - விமர்சனம் 

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

சினிமாவின் பல்வேறு வடிவங்களும், கிட்டத்தட்ட அனைத்துமே, தமிழ் சினிமாவில் முயன்று பார்க்கப்பட்டுள்ளன. 'ஆந்த்தாலஜி' என்பது சினிமாவின் ஒரு வடிவம். ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவோ இல்லாமலோ ஒரு திரைப்படமாக உருவாக்கப்படுவது 'ஆந்த்தாலஜி' (பொதுவாகவும் அந்த வார்த்தையின் அர்த்தம் அதுதான்). அந்த வகையில் தமிழில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும், பெரிய வெற்றியாக அது அமைந்ததில்லை. 'சில்லுக்கருப்பட்டி' அந்த வகை முயற்சி. இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை படம் அளித்திருக்கிறது.
 

samuthirakani sunaina



ஒரு திரைப்படம், ஒரு மைய இலக்கை கொண்டிருக்க வேண்டும், அதை நோக்கி பாத்திரங்கள் பயணிக்க வேண்டும், அதில் தடைகள் வேண்டும், பாத்திரங்களுக்கிடையே பிரச்னைகள் வேண்டும், திருப்பங்கள் வேண்டும்... இதெல்லாம் சிறப்பாக அமைந்தால்தான் அது திரைப்படமா? ஒரு நல்ல திரைப்படத்துக்கு இவையெல்லாம் கண்டிப்பாக வேண்டுமா என்று கேட்டு, தேவையில்லை என்று இனிமையாக, அழகாக, அமைதியாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். 'பூவரசம் பீப்பீ' மூலம் பால்ய வயதின் வெப்பம், சோகம், மகிழ்ச்சி, குழப்பம், அனைத்தையும் கூறி கவனம் ஈர்த்தவர் 'சில்லுக்கருப்பட்டி'யுடன் வந்திருக்கிறார்.

'பிங்க் பேக்', 'காக்கா கடி', 'டர்ட்டுல்ஸ்', 'ஹே அம்மு' என நான்கு கதைகள். நான்குக்குமான தொடர்பு காதல். வெவ்வேறு வயதில், தளத்தில் நிகழும் காதலை மிகைகள் இல்லாமல் (வெகு சில இடங்கள் தவிர்த்து) இயல்பாக, இனிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். மாநகரின் பணக்காரர்கள் குப்பையாகக் கருதித் தூக்கியெறியும் பொருள்களிலிருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வாழும் சிறுவன் மாஞ்சா, அந்த குப்பைக்குள் தன் காதலை கண்டெடுக்கிறான். தினமும் அவன் காணும் ஒரு பிங்க் பைக்குள் இருக்கும் பொருள்களை வைத்தே மிட்டி ('தெய்வத்திருமகள்' சாரா) மீது காதல் வருகிறது. அவளை தேடிப் போகிறான். அதன் பிறகு, நாம் பயப்படுவது போல காதல், பிரச்னை என்றெல்லாம் போகாமல் கவிதையாக முடிகிறது 'பிங்க் பேக்'.

 

manikandan nivethitha



ஐடி ஊழியராகவும் மீம் கிரியேட்டராகவும் இருக்கும் மணிகண்டனுக்கும் ஃபேஷன் டிசைனர் நிவேதிதாவுக்கும் ஏற்படும் காதல் 'காக்கா கடி'. காதலை சமகால விஷயங்களுடன் மிக யதார்த்தமாகப் பேசுகிறது. திடீரென கேன்சரால் பாதிக்கப்படும் மணிகண்டனை துணைநின்று மீட்கும் நிவேதிதா, படம் பார்ப்பவர்களின் 'ரிலேஷன்ஷிப் கோல்' ஆக வாய்ப்புகள் அதிகம். கேன்சர் என்றவுடன் இருமல், ரத்தம், சோகமெல்லாம் இல்லை. இந்தக் கதையும் மிக அழகாக நகர்ந்து இனிமையாக முடிகிறது. 'பூவரசம் பீப்பீ'யில் சிறுவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்வுகளைக் கூட தைரியமாகக் காட்சிப்படுத்தியவர் ஹலிதா. இந்தப் படத்திலும் பேசாத பொருள்கள் சிலவற்றை போறபோக்கில் பேசுகிறார். சரி, படத்தின் கதையை அப்படியே சொல்லிவிட்டீர்களே என்று தோன்றினால், இந்தப் படத்தின் கதையை தாராளமாக சொல்லலாம். ஏனெனில் அந்தக் கதைகளல்ல, கதைகள் தரும் இனிமையான அனுபவம்தான் 'சில்லுக்கருப்பட்டி'.


'டர்ட்டுல்ஸ்'... காலம் கடந்த, ஆனால் கனிந்த காதல். பிற உறவுகள் தள்ளி நிற்கும் அல்லது நிற்பதுபோல இருக்கும் காலகட்டத்தில் நமக்கென ஒரு துணை, ஒரு ஸ்பரிசம் தேடும், தேவைப்படும் வயதில் யசோதாவுக்கும் (லீலா சாம்சன்) நவநீதனுக்கும் (ஸ்ரீராம்) நிகழும் காதல். "நமக்கு நெருக்கமானவங்க மரணத்தில் இருந்து மீள்வதே வாழ்க்கையாகிப் போச்சுல்ல" போன்ற பக்குவமான பேச்சுகளும் "இந்தாங்க இஞ்சி டீ வித் ஆடட் டிகினிட்டி" போன்ற சின்ன குறும்புப் பேச்சுகளும் நிறைந்த காதலாக கவர்கிறது 'டர்ட்டுல்ஸ்'.

 

 

sriram leela samson



வேலையிலும் மொபைல் போனிலும் மூழ்கி வேறெதையும் பெரிதாகக் கவனிக்க, கண்டுகொள்ள நேரமில்லாத நடுத்தர வயதை எட்டிக்கொண்டிருக்கும் ஆடிட்டர் தனபாலுக்கும் (சமுத்திரக்கனி) வீட்டை கவனிப்பதே வாழ்க்கையாகிப் போன அவரது மனைவி அமுதினிக்குமான (சுனைனா), இடைவெளி பெருகுவதும் இடையில் வேறு ஒரு பொருளால் இடைவெளி நிறைந்து இருவரும் நெருங்குவதும்தான் 'ஹே அம்மு'. குடும்பத்தில் செலவிடப்பட வேண்டிய நேரத்தை பணியும் ஃபோனும் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அருகிலேயே இருப்பவர்கள் மீது ஏற்படும் அலட்சியம், வருடங்களோடு சேர்ந்து மெல்ல வடியும் காதல் என உறவுப் பாடமாக அமைந்துள்ளது இந்தப் பகுதி. பாடமென்றால் சீரியசான பாடமில்லை, சிரிப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.

நான்கு கதைகளிலுமே சின்னச் சின்ன சுவாரசியங்களோடு நகைச்சுவையும் சேர்ந்த வசனங்கள் பெரும் ஈர்ப்பு. படத்தில் நான்கு கதைகளும் வைக்கப்பட்ட வரிசையில் தனது திரைக்கதை ஸ்மார்ட்னெஸ்ஸை நிறுவியிருக்கிறார் ஹலிதா. ஒவ்வொரு கதையிலும் இருக்கும் இனிமை, சில்லுக்கருப்பட்டி என்ற பெயருக்கு நியாயம் செய்கிறது. இத்தனை இனிமையான இந்தப் படத்தைப் பார்த்தால் திகட்டாதா, சுகர் வருமா என்றால் வராது. இது வெள்ளை ஜீனி அல்ல, கருப்பட்டி. அதிலும் 'இன்னும் கொஞ்சம் நீளுமோ' என்ற எண்ணம் இருக்கும்போதே முடிந்துவிடும் 'சில்லு சில்லான' கருப்பட்டி.

 

ragul



நடிப்பில் சமுத்திரக்கனி - சுனைனா, மணிகண்டன் - நிவேதிதா இணைகள் மற்றவர்களை விட இயல்பாக ஈர்க்கின்றன. மற்றவர்களும் பெரும் குறை வைத்துவிடவில்லை. பிரதீப்குமாரின் பின்னணி இசை படமெங்கும் சாரல் போல வீசிக்கொண்டே இருக்கிறது, சில இடங்களில் அதீதமாய். இப்படி ஒரு படத்தில் ஆங்காங்கே அமைதி இருந்திருக்கலாம். அபிநந்தன், மனோஜ் பரமஹம்ஸா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஆகியோரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதையையும் ஒரு அழகான கிரீட்டிங் கார்டாக மாற்றியுள்ளது. இயக்குனர் ஹலிதாவே படத்தை எடிட் செய்திருக்கிறார். தான் சொல்ல நினைத்ததை நினைத்த அளவில், வடிவத்தில் தந்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்குமான அந்த டைட்டில் டிசைனிங், அனிமேஷன் அழகு.


'ஓலா' பயணத்தில் இத்தனை முறை யதார்த்தமாக சந்திக்க முடியுமா, அலெக்ஸ்சாவை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமா போன்ற கேள்விகள் ஆங்காங்கே எழலாம். நான்காவது கதை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சம்பவங்களுடன் நீள்கிறதே என்ற எண்ணம் தோன்றலாம். இப்படி சில சின்னச் சின்ன சினிமா சுதந்திரங்களை எடுத்துக்கொண்டு ஒரு நல்ல படத்தை தந்திருக்கும் இயக்குனருக்காக அந்தக் கேள்விகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லலாம்.                                  
                    

 

                                

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான்” - சமுத்திரக்கனி 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
samuthirakani speech in Ramam Ragavam Teaser Launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த  விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், “அப்பா கதை என்றாலே கேட்டுவிடுவது. அப்படித்தான் இந்த கதையையும் கேட்டேன். அப்பா மகன் உறவை புரிந்து கொள்ளவே முடியாது. நிறைய அப்பாக்கள் என்னிடம், மகனை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்து நாள் முன்னாடி கூட சிவகாசியில், ஒரு அப்பா, அவரின் மகனிடம் பேசச் சொன்னார். ஃபோனில் கேம் ஆடிக்கொண்டே இருக்கிறான், தப்பான வழியில் போய்விடுவானோ என பயமாக இருப்பதாக சொன்னார். பையனிடம் பேசினேன். அவனுக்கு ரொபோட்டிக் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை அவனே தயாரிக்கப் போவதாகவும் சொன்னான். 

அதோடு அதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றான். உடனே அவனின் அப்பாவிடம் பத்து நிமிஷம் பேசினேன். இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான். மகன் என்னமோ செய்ய வேண்டும் என நினைக்கிறான். அதை செய்யவிடுங்கள். உங்களுடைய அறிவை அவன் மூளையில் திணிக்காதீர்கள். எல்லோரும் அவரவர் இடத்தில் மிகச் சரியாக இருக்கிறார்கள்” என்றார்.  

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார்.