தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சமீபத்திய படங்களுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியானது. இப்படத்தில், விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. குறிப்பாக, மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமே தங்களை வெகுவாக ஈர்த்ததாக தெலுங்கு சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
நேரடி தெலுங்கு படமான 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இம்மாத தொடக்கத்தில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதிக்கு தெலுங்கு சினிமாவில் உருவாகும் புதிய மார்க்கெட்டை, பல தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக, விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற பழைய படங்களின் தெலுங்கு டப்பிங் உரிமையைக் கைப்பற்ற தமிழ் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அதன் முதல் கட்டமாக, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சமீபத்தில் பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய் சேதுபதி இனி நடிக்கும் படங்களின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றவும் கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி விஜய் சேதுபதி காட்டில் அடைமழைதான் என்கின்றனர் தெலுங்கு சினிமா மார்க்கெட்டை நன்கு அறிந்த கோடம்பாக்க சினிமா வட்டாரங்கள்.