வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கடந்த 18ஆம் தேதி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து, நவம்பர் 25ஆம் தேதி மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
திடீரென தீபாவளி வெளியீட்டிலிருந்து மாநாடு படக்குழு பின்வாங்கியதற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சிம்புவின் பட வெளியீட்டிற்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாகச் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், மைக்கேல் ராயப்பனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சம்பளத்தைக்கூட விட்டுக்கொடுத்து சிம்பு நடித்தார். பின், விநியோகஸ்தர் மூலம் விநியோகிக்கையில் அந்தப் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. விநியோகஸ்தர் மூலம் விநியோகிக்கையில் நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்தை நடிகர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் இடையேயான இந்த விஷயத்தை ஒரு நடிகரின் மீது சுமத்தி, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதும் பிரச்சனை செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
தமிழ்த்திரைப்பட நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என ஆரம்பித்து அருள்பதி என்பவர் மாஃபியாபோல செயல்பட்டுக் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் குற்றம் சாட்டிய டி.ராஜேந்தர், கமிஷ்னர் அலுவலகத்தில் இன்று கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்கத் தவறினால், தமிழக முதல்வரின் வீட்டு வாசலில் அல்லது கோட்டை வாசலில் உண்ணாவிரதம் இருந்து இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.