விஜய் சேதுபதி, விவேக், மேகா ஆகாஷ், மதுரா நடிப்பில் வேங்கட கிருஷ்ணா ரோநாத் இயக்கத்தில் கடந்த மே 19 ஆம் தேதி திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் 'ஜெசி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றுள்ள நடிகை மதுரா. தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி பற்றி கூறுகையில், "தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜய் சேதுபதி அவர்கள், என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதற்றத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார். அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
மறைந்த நடிகர் விவேக் பற்றி கூறுகையில், "நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது. எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது அப்போது பியானோ அங்கிருந்தது. அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து பாடல் (குறுக்கு சிறுத்தவளே என் குங்குமத்த) என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார். அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவரின் மறைவை எனக்கு மிகுந்த வேதனையை தந்தது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே என்று" என்றார்.
தமிழ் படங்கள் குறித்து கூறுகையில், "தமிழ் எனக்கு பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டது. நான் ஒரு தமிழ் பெண், சிறு வயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்ததால் தமிழ் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழில் நடிக்கப் போகிறோம் என்றவுடன் தமிழில் எல்லா நடிகர் நடிகைகள் உடைய படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். ரஜினி சார் உடைய மாஸ், கமல் சார் உடைய நடிப்பு, விஜய் சேதுபதியுடைய இயல்பான நடிப்பு அனைத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது" என்றார்.