
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. ஆதி, அறிவழகன், தமன் கூட்டணி, இதற்கு முன்பு இணைந்து பணியாற்றிய ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் .
ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர் இப்படத்திற்குத் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இயக்குநர் அறிவழகன், இப்படத்தை விளம்பரம் செய்யாமல் கொன்றார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சப்தம் படத்தை தாமதமாக வெளியீட்டும் விளம்பரம் செய்யாமலும் அவர்கள் கொன்றனர். ஆனால் ஆடிய்ன்ஸ் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் ஹவுஸ் ஃபுல் ஷோ மூலம் உண்மையான அன்பையும் ஆதரவையும் அளித்தனர். அதோடு எல்லா தரப்பு மக்களிடமிருந்தும் ஃபோன் அழைப்புகள் வருகிறது. அதற்காக நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தை கொன்றார்கள் எனக் கூறிய அறிவழகன் யார் அவர்கள் எனச் சொல்லவில்லை. இதனால் அவர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இவ்வாறு அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.