Skip to main content

'ஸ்டுவர்ட் பிராட்டை பாராட்டிவிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த யுவராஜ்சிங்....!'

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

yuvaraj singh

 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டுவர்ட் பிராட் வெஸ்ட்இண்டீஸ் அணியின் பிராத்வெய்ட் விக்கெட்டை வீழ்த்தியது மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். ஸ்டுவர்ட் பிராட் இந்தச் சாதனையை எட்டிப்பிடித்த ஏழாவது வீரர் ஆவர். இதனையடுத்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் யுவராஜ்சிங் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அதில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

 

அவருடைய வாழ்த்துக் குறிப்பில் "நான் எப்போது ஸ்டுவர்ட் பிராட் பற்றி பேசினாலும் ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்ததைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இன்று அதை செய்யாதீர்கள். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயம் இல்லை. பல வருட உழைப்பும், அர்ப்பணிப்பும் அதில் உள்ளது. ஸ்டுவர்ட் பிராட் ஒவ்வொரு முறையும் நீங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.. நீங்கள் சாதனையாளர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.