Skip to main content

மாணவனை ஏமாற்றிய ஆசிரியர்... மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Teacher who cheated student ... Police arrested those involved in fraud

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயது பிரகாஷ். இவர் வேப்பேரி அரசுப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டில் படிக்கும் போது அங்கு அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் வானூர் தாலுகா நாவல்குளம் என்ற ஊரைச் சேர்ந்த ராமசாமி. இவருக்கு மாணவர் பிரகாசுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது . இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாஷை தற்செயலாகச் சந்தித்த ஆசிரியர் ராமசாமி, ‘பிரகாஷ் நீ பிடெக் படித்து முடித்துவிட்டு வருமானம் இல்லாமல் வீட்டில் இருக்கிறாயே அதனால் உனக்கு வருமானத்திற்கு வழி செய்கிறேன் என்று கூறியுள்ளார் ஆசிரியர் ராமசாமி.

 

நான் சில நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன் என்னுடன் சேர்ந்து தொழில் செய்ய வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்”. அதன் பின்பு முருக்கேரியில் உள்ள ஒரு தனியார் கணினி மையம் நடத்தி வரும் காஞ்சிபுரம் பாண்டவர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் விழுப்புரம்  கோலியனூர் கண்ணன் மனைவி கவுசல்யா, அவரது மகன் கவியரசு ஆகியோரை பங்குதாரராகக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக அவர்களை பிரகாஷுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் பிரகாசிடம் எங்கள் நிறுவனம் பல இடங்களில் நிலங்களை வாங்கி அதை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறோம்.

 

அதன் மூலம் எங்களுக்குப் பல லட்சங்கள் லாபம் கிடைக்கிறது. அதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 18000 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அவர்களது பேச்சை நம்பிய பிரகாஷ் தன்னுடன் தனக்குத் தெரிந்த 25 நபர்களை அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களிடம் இருந்து 2 கோடியே 63 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து அந்த நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் பிரகாஷ் உள்ளிட்ட 26 பேருக்கும் அவர்கள் கூறியபடி மாதம்தோறும் பணம் தராமல் ஏமாற்றி வந்ததோடு ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. மேலும் தனக்கு ஆசிரியராக இருந்தவரே மோசடியில் ஈடுபட்டு உள்ளதைக் கண்டு நொந்துபோன பிரகாஷ் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோசடியில் சம்பந்தப்பட்ட சக்திவேல், கௌசல்யா, ஆசிரியர் ராமசாமி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கௌசல்யாவின் மகன் கவியரசை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைதாகியுள்ள ஆசிரியர் ராமசாமி தற்போது மயிலம் அருகே உள்ள பாதிரிப்புலியூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் தன்னிடம் படித்த மாணவனை நம்ப வைத்து மோசடி செய்துள்ள ஆசிரியர் மற்றும் அந்த கும்பல் இதுபோன்று பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்