Skip to main content

ஆளும் கட்சியை திமுக கேள்வி கேட்பது இல்லை, வெளிநடப்பு மட்டுமே செய்கிறார்கள்: பொன்.ராதா குற்றச்சாட்டு!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018


ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்பது இல்லை, வெளிநடப்பு மட்டுமே செய்கிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

இதுகுறித்து நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் அமைய உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும். தமிழகம் முன்னேற்றம் அடையும். டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சித்திட்டங்களை அறிவிக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. இதை அன்னிய சக்திகள் தூண்டி விடுகிறார்கள்.

மக்களுக்கு நன்மை எது, தீமை எது என்பது தெரியவேண்டும். முன்னேற்றம் வரவேண்டுமானால் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும். வேலைவாய்ப்பு பெருகும். இங்குள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வது தவிர்க்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் இதனை வெளிப்படுத்தி உள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தை திசை திருப்பியதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுவதாக நான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறேன். இப்போது அது வெளிவந்துள்ளது.

இந்த அமைப்பை தடை செய்வதோடு மட்டுமல்ல, வேருடன் அகற்ற வேண்டும். இதுபோல பல அமைப்புகள் உள்ளன. அவற்றையும் களையெடுக்க வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.வும் காரணம். சட்டசபையில் அவர்கள் இதுபற்றி பேசவில்லை.

ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்பது இல்லை, வெளிநடப்பு மட்டுமே செய்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை என்று சட்டசபையில் தி.மு.க. கேள்வி எழுப்பவில்லை. இதன் மூலம் இருகட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்