Skip to main content

17 வயதில் திருமணம்; 2 வயது குழந்தையைக் கொன்று நாடகமாடிய தாய்!

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mother arrested for incident 2-year-old boy near Panruti

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(27) கூலித் தொழிலாளியான இவருக்கும், பண்ருட்டி அருகே உள்ள உறையூர் கிராமத்தைச் சேர்ந்த நித்யா(19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிலா அறுவடைக்காக திருச்செங்கோடு பகுதிக்குச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நித்யா கடந்த 2 ஆண்டுகளாகச் சொந்த ஊரில் தனியாக மகனுடன் வசித்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி அவரது 2 வயது ஆண் குழந்தை இட்லி சாப்பிட்டுவிட்டுத் தூங்கியபோது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

அதனையடுத்து போலீசார், குழந்தையின் தாய் நித்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின்னான தகவலைக் கூறினார். தொடர்ந்து  விசாரணை நடத்தியபோது, திருச்செங்கோடு பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியபோது அப்போது நித்யாவுக்கு 17 வயது எனத் தெரியவந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாகக் கூறி போக்சோ சட்டத்தின் கீழ் சக்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதனையடுத்து நித்யா தாய் வீடான உறையூரில் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர் இல்லாததால் தனிமையில் கணவர் இன்றி குழந்தையுடன் வசித்து வந்ததால், அப்பகுதியில் உள்ளவர்கள் இவரை ஏளனமாகப் பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார் நித்யாவை கைது செய்தனர். தாயே அவரது 2 வயது ஆண் குழந்தையை கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்