Skip to main content

ராகுல் காந்தி யாத்திரையின்போது அவமரியாதை; காங்கிரஸ் முக்கியத் தலைவர் பகீர் குற்றச்சாட்டு!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Accusation of important Congress leader on Disrespect during Rahul Gandhi Yatra

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி (நாளை) எனத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. 

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடிய பெண் ஒருவர், கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ராதிகா கேரா. இவர், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில், ராதிகா கேரா, காங்கிரஸ் கட்சியில் நேற்று (05-05-24) அதிரடியாக விலகினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ராதிகா கேரா இன்று (06-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னை அவமரியாதை செய்வது குறித்து கட்சி உயர் தலைவர்களுக்கு பலமுறை புகார் விடுத்தும் யாரும் எனக்கு உதவவில்லை. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது, ​​காங்கிரஸ் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா, என்னை மது அருந்தும்படி வற்புறுத்தினார். அத்துடன், போதையில் அவர் மற்றும் 5-6 கட்சித் தொண்டர்களுடன் எனது கதவைத் தட்டினார். சத்தீஸ்கர் பிரிவின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் சுஷீலின் அவமரியாதை நடத்தை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், பூபேஷ் பாகேல் மற்றும் பவன் கேரா ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. 

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தி யாரையும் சந்திக்கவில்லை. மக்களை 5 நிமிடம் மட்டுமே கை அசைத்துவிட்டு தனது டிரெய்லருக்கு திரும்பிச் சென்றார். அவரது நியாய யாத்ரா பெயருக்காக இருந்தது. அவர் ஒரு பயண வலைப்பதிவாளராக மாற விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் அங்கு டிராவல் வ்லாக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் பிரியங்கா காந்தியைச் சந்திக்க முயற்சித்தேன். ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. நான் ஒரு பெண், என்னால் சண்டையிட முடியும். ஆனால், பெண் என்றால் அடிபடுவீர்கள் என்பதுதான் காங்கிரஸின் முழக்கம்.

காங்கிரஸ் ராமர், சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோதம் என்று நான் எப்போதும் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அதை நம்பவில்லை. என் பாட்டியுடன் ராமர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பியதும், எனது வீட்டின் வாசலில் 'ஜெய் ஸ்ரீராம்' கொடியை வைத்தேன். இதனால், காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது. அதன்பிறகு நான் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடும்போதெல்லாம், தேர்தல் நடக்கும் சமயத்தில் ஏன் அயோத்திக்குச் சென்றீர்காள்? என்று என்னைத் திட்டித் தீர்த்தனர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்