Skip to main content

நான் திருட்டுத்தனமா பாலை கறந்தேன், அவன் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் கறந்தான்! ஆட்டோ சங்கர் #7

Published on 08/06/2018 | Edited on 16/06/2018
auto sankar 7



அவ்வளவு சாராயத்தோட கோட்டைக்குப் போன மொத ஆள் நானாகத்தான் இருக்கும். கோட்டையிலே போய் யாரை பார்த்தேன் தெரியுமா? முனு ஆதியை! முனு ஆதியைப் பற்றி பின்னாடி சொல்றேன்.

நான் இப்ப வேணா இத்தனை பழிகளை சுமந்துக்கிட்டிருக்கேனே தவிர அப்போல்லாம் மாசு  மருவற்றவன். அப்படி இருந்தும் இப்ப ஏன் இந்த கஷ்டம்? எங்கே பிசகு நடந்துச்சு? புரியல... புரியாது. அதுதானே வாழ்க்கை. உண்மைன்றது கற்பனையைவிட வேடிக்கையாவும் விபரீதமாகவும் எத்தனையோ தடவை தோற்றம் தருவது! என் வாழ்க்கையிலேயே அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்!

சாராய வியாபாரமும் அமோகமா  நடந்துச்சு... என் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துகிட்டே போச்சு.  கல்லா கட்டி, 4 ஷிப்ட் போட்டு   வியாபாரம் செய்யவேண்டிய அளவுக்குப் பெருகிப்போச்சு. முப்பத்தைஞ்சு லிட்டர் கேன் வாங்கி எடை கட்டினா நாலு மடங்கு லாபம் பார்க்கலாம்.   எழுநூறு ரூபா சரக்குக்கு ரெண்டாயிரத்து எண்ணூறு வரை சம்பாதிக்கலாம்...

 

 


நல்ல சரக்குக்கு அடையாளம்... கையை சாராயத்துக்குள்ளே முக்கி தீயிலே காட்டினதும் குப்புன்னு கையை சுத்தி தீப்பிடிக்கும். ஆனா கையிலே  சுடாது... அந்த நல்ல சரக்கிலே நாலு பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு கேனை நாலு கேன் ஆக்குவதற்குப் பேர்தான் 'எடை கட்டுவது' சும்மா பேருக்கு  அப்பப்ப ரெய்டு வருவாங்க. அதுவும் முதல் நாளே என்கிட்டே வந்து இன்ஸ்பெக்டர் தலைமலை சொல்லிடுவாரு...  தலைமலைன்னு  சொன்னதும்   ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. போலீஸைப் பத்தி சரியா புரிய வைக்க இதைவிட நல்ல சம்பவத்தைச் சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.

ஒரு நாள் ஸ்டேஷனுக்கு அவரைப் பார்க்கப் போனப்ப, லாக்-அப்  ரூமிலே தலைமலையும், கூட நாலு போலீஸ்காரங்களுமா சேர்ந்து ஒரு ஆளை நையப்புடைச்சுக்கிட்டிருந்தாங்க... ஸ்டேஷன்ல இது வழக்கமா நடக்கிற விஷயம்தான்னு கண்டுக்காம வந்துட்டேன் முதல்நாள். ரெண்டாவது நாளும் அந்த ஆளை, ஆள்மாற்றி ஆள் பந்தாடிக்கிட்டு இருந்தாங்க... உடம்பெல்லாம் ரத்தம் ஒழுக அவனைப் பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு.

"இனிமே ஒழுங்கா இருப்பியா?”ன்னு ஆள் மாற்றி ஆள் கேள்வி கேட்டுக்கிட்டே அக்கக்கா கழற்றினாங்க. ஆள் செத்துடுவானேன்னு பயமாப்போச்சு. மூன்றாவது நாளும் அவன் தொடர்ந்து அடி வாங்கறதைப் பார்த்துட்டு என்னன்னு விசாரிச்சேன்... "எதாவது ரௌடித்தனம் பண்ணினானா?'

 

 



station torture

 

"ம்ஹும்... அதெல்லாமில்லை! இவனும் ஒரு சாராய வியாபாரிதான். நல்லா சம்பாதிச்சுக்கிட்டிருந்தான். எங்களுக்கு மாமூல் தந்துக்கிட்டிருந்தான்.   இப்ப திடீர்னு வந்து "இனிமே நான் சாராய வியாபாரமெல்லாம் பண்ண மாட்டேன். திருந்திட்டேன்”றான். அதற்குத்தான்  இந்த ஸ்பெஷல் பூஜை''

எனக்கு திக்குன்னு ஆயிருச்சு. எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் போலீஸ் ஜாதிக்கு நன்றி மறந்துடும். பாவம் அந்த வியாபாரி. இந்த  இன்ஸ்பெக்டருக்கு எவ்வளவு பணம் கொடுத்திருப்பான்... அதையெல்லாம் சுத்தமா மறந்துட்டு இப்ப மாமூல் வரலைன்னதும் இப்படி அடிச்சு  நொறுக்குகிறாரே... கொஞ்சம்கூட நெஞ்சிலே ஈரமே இருக்காதோ?

திருந்தினால் கூட திருந்த விட மாட்டேன்றாரே. இப்ப எனக்கு மரியாதை தந்தாலும் எதிர்காலத்திலே நான் மனசு மாறினாலும் இந்த கதிதான்!போலீஸ்காரங்களை ரொம்ப நெருங்கினாலும் போச்சு. ரொம்ப பகைச்சாலும் போச்சு. மனசுக்குள்ள ஒரு எச்சரிக்கை விளக்கு எரிஞ்சது.  அடிவாங்கின அந்த ஆளோட ஏரியா இது கிடையாது. அவன் பெயில்ல போயிரக்கூடாதுன்றதுக்காக ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் மூணு நாளைக்கு  மேலே வச்சுக்காம இடம் மாற்றிக்கிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் மண்டகப்படிதான்!

மாதா மாதம் திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அறுபதாயிரம், எழுபதாயிரம் மாமூல் வெட்டுவேன். ஒவ்வொரு போலீஸ்காரரும் வாங்கற  சம்பளத்தை விட, ரெண்டு மடங்கு தொகை நான் தருவேன். அந்த ஸ்டேஷனைப் பொறுத்தமட்டிலும் நான்தான் கவர்மெண்ட். ஏட்டு, ரைட்டர், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், எஸ்.பின்னு... அத்தனை பேருக்கும் "கேட்டகரி”யைப் பொறுத்து சம்பளம் தந்தேன்.

 

 


நான் ஸ்டேஷனுக்குப்போய் மாமூல் கட்டின நிலைமாறி, என்னைத்தேடி வரும்படி வச்சேன். வீடு தேடி வர ஒவ்வொரு போலீஸ்காரரும், ஐ.ஜி.க்குத் தர்ற மரியாதையை எனக்குத் தந்தாங்க. சோபாவிலே கால் மேல கால் போட்டு தர்பாரா உட்கார்ந்திருப்பேன். இடப்பக்கம் வாள் சொருகிக்காத இளவரசன் கணக்கா செம பந்தா! கையிலே விஸ்கி கிளாஸ் வேற... கைகட்டி, வாய் பொத்தி நிப்பாங்க சுகுமாரும், மற்ற போலீஸும். திருவான்மியூர்லே  கொடிகட்டிப் பறந்தேன்.

சாராயத்தை ஒரு இடத்திலே கொடுத்துட்டு வியர்வையும் களைப்புமா திரும்பி வந்திருந்தேன். தம்பி மோகன் வந்து, யாரோ எனக்காக ரொம்ப  நேரமா காத்திருப்பதாகச் சொன்னான். போய்ப் பார்த்தேன். அவன் எழுந்து நின்றான். அப்ப மெட்ராஸ்லே இருந்த பெரிய பெரிய தாதாக்கள்  பேரெல்லாம் சொன்னான். பேரைக் கேட்டாலே நான் மிரளுகிற பெயர்கள். அவர்களெல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமென்றான்.

"நீங்க என்னைப் பார்க்க வந்திருக்கிற காரணம்?''

"இந்த வட்டாரத்திலேயே நீங்கதான் பெரிய சாராய வியாபாரின்னு சொன்னாங்க... அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்! நான் உங்களுக்கு ரொம்ப உபயோகப்படுவேன்!''

"எப்படி?''

அவன் சொன்ன பதில்கள்ல எனக்கு செம அதிர்ச்சி. கொஞ்சம்கூட எதிர்பாராத மிருகத்தனமான யோசனைகள் சொன்னான் அவன்.

"இப்படி மனிதாபிமானமில்லாம இருக்கீங்களே''ன்னு  சொல்லிட்டு சிரிச்சேன்.

நான் செய்த சாராய வியாபாரம் ஒன்றும் புனிதமான பணி இல்லே! அதே சமயம் சன்னமா ஒரு தொழில்தர்மம் வச்சிருந்தேன் நான்.

ரெண்டு பேரோட குணமும் பொல்லாததுதான்! அதே சமயம் நான் திருட்டுத்தனமா மாட்டுகிட்டேயிருந்து பாலை கறந்தேன்... அவன் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் கறந்தான்னு சொல்லலாம். விரிவா எல்லாத்தையும் பின்னாலே சொல்றேன். பேரைக்கேட்டேன். "பாபு”ன்னு சொல்லி சிரிச்சுகிட்டே கை குலுக்கினவன் மெல்ல "என் மேலே ஒரு கொலைக் கேஸ்... நடந்துக்கிட்டிருக்கு'' என்றானே பார்க்கலாம். பதறிப்போனேன்.

"கொ...கொலை....கேஸா?'' -எனக்குக் குலை நடுங்கியது.

பின்னாளில் என் மீதே ஆறு கொலைகள் பண்ணினதா கேஸ் வரப்போகுது, அதற்கு இந்த பாபுதான் அப்ரூவராகி எனக்கெதிரா சாட்சி  சொல்லுவான்னு அப்ப சுத்தமா எதிர்பார்க்கல!
 

 

அடுத்த பகுதி:

விலை மாதுக்களை காக்கப் போய், நான் விபச்சாரியான கதை... ஆட்டோ சங்கர் #8

முந்தைய பகுதி:

சாராயத்தோடு செக்ரட்டேரியட்டுக்குப் போன கதை! - ஆட்டோ சங்கர் #6

 

 

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23