Skip to main content

ஜப்பானிடம் கொரியா அடிமைப்பட்டது எப்படி? கொரியாவின் கதை #5

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
koriyavin kathai


 

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை விற்க கிழக்கு நாடுகளை நோக்கி படையெடுத்து வந்தன. சீனா, கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற இடங்களில் ஐரோப்பியர்கள் வர்த்தக உரிமையைப் பெற்று சந்தைகளை ஏற்படுத்தினார்கள்.

 

 

 

ஜப்பானில் மெய்ஜி பேரரசு வலுப்பெற்றிருந்தது. ஜப்பான் முழுவதையும் ஒருங்கிணைந்த பேரரசாக இருந்தது. எனவே, ஜப்பானிய போர்வீரர்களான ஆயிரக்கணக்கான சாமுராய்கள் வேலையிழந்தனர். பொருளாதாரரீதியாக நலிவடைந்தனர். இந்தச் சமயத்தில் கொரியாவைக் கைப்பற்றுவது தொடர்பான விவாதம் எழுந்தது. 1873 ஆம் ஆண்டு இந்த விவாதம் தீவிரமடைந்தது. இந்த விவாதத்துக்கு முக்கியமான காரணமாக சைகோ டகாமோரி என்பவர் இருந்தார். இவர் சாமுராய் வீரர்களில் முக்கியமானவர். பேரரசர் மெய்ஜி தலைமையில் ஜப்பானிய பேரரசை மீண்டும் அமைத்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. 1868 ஆம் ஆண்டு மெய்ஜி பேரரசு பொறுப்பேற்றது. அதன்பிறகு அங்கு தொழில்வளம் பெருகியது. ஆனால், வர்த்தகம் செய்ய போதுமான சந்தையோ, தொழில்களுக்கு தேவையான கச்சாப் பொருட்களோ இல்லை. எனவேதான் கொரியாவை கைப்பற்றுவது என்ற பேச்சு எழுந்தது. கொரியாவோ சீனாவின் குய்ங் பேரரசின் பாதுகாப்பில் இருந்தது.

 

koriyavin kathai


 

ஜப்பானியப் பேரரசை கொரியா அங்கீகரிக்க மறுத்ததை காரணமாக வைத்து அந்த நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. முதலில் கொரியாவை குய்ங் பேரரசின் பிடியிலிருந்து விடுவித்து, அதன்பின்னர் அந்த நாட்டை தனது பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மெய்ஜி பேரரசு நினைத்தது. கொரியாவை கைப்பற்றுவதால் ஆயிரக்கணக்கான சாமுராய் வீரர்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். ஆசிய நாடுகளைக் கைப்பற்ற இது வழியை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஜப்பானிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை ஆசியநாடுகளில் இருந்த பெறமுடியும் என்றும் நினைத்தார்கள்.

 

 

 

இந்த விவாதங்களின் முக்கிய அம்சங்களில் ஏழு அம்சங்களை குறிப்பிட்டு 1873 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஆவணத்தை ஒகுபோ டோஷிமிச்சி என்பவர் தயாரித்தார். இவரும் நவீன ஜப்பானை உருவாக்கியவர்களில் முக்கியமான சாமுராய்களில் ஒருவர். அந்த ஆவணப்படி கொரியா மீது நடவடிக்கை எடுப்பது முதிர்ச்சியில்லா யோசனை. ஜப்பான் நவீனமயமாகும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான செலவாகும் குறிப்பிடப்பட்டது. யுத்த எதிர்ப்புக் குழுவினர் இந்த ஆவணத்தை ஏற்றனர். குறிப்பாக நவீனமயம் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய இவாக்குரா டோமோமொய் தலைமையிலான நிபுணர்கள் குழு யுத்தத்தை ஏற்கவில்லை. இதையடுத்து, கொரியா மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.

 

koriyavin kathai


 

ஆனால், கொரியாவில் ஆட்சி அதிகாரம் சீர்குலையத் தொடங்கியது. கொரியா மன்னர் ஜியோங்ஜோ இறந்தவுடன், அவருடைய 10 வயது மகன் சுஞ்சோ மன்னராக பொறுப்பேற்றார். நிர்வாகப் பொறுப்புகளை அவருடைய மாமனார் கிம் ஜோ சுன் கவனித்துக் கொண்டார். இந்தச் சமயத்தில்தான் அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. குறிப்பாக நில வரி, ராணுவ சேவை உள்ளிட்டவற்றிலும் ஊழல் அதிகரித்தது. விவசாயிகள் பெருந்துன்பத்தில் சிக்கினார்கள். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு, மக்களை வாட்டி வதைத்தது. அடிமைகளை வைத்திருக்கக்கூடாது என்று 1801 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டாலும், அந்த முறை சட்டப்பூர்வமாக 1894 ஆம் ஆண்டுவரை நீடித்தது.

 

கொரியாவில் ஆதிக்க வகுப்பினராக இருந்த யாங்பான் மக்கள் மத்தியில் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தினர் ஊடுருவி இருந்தனர். உட்பகையும், துன்பறுத்தல்களும் கிறிஸ்தவ பாதிரியார்களையும் பின்பற்றுகிறவர்களையும் ஒரு பிரிவினர் கொன்று குவித்தனர். அவர்கள் கொரிய தியாகிகள் என்று அழைக்கப்பட்டனர். இதையடுத்து உயர்வகுப்பினர் யாரும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதில் தயக்கம் காட்டினர். ஆனால், சமத்துவத்தை விரும்பிய கொரிய உழைப்பாளிகளும், விவசாயிகளும் கிறிஸ்தவ மதத்தில் சேரத்தொடங்கினர்.


 

koriyavin kathai


 

இந்தச் சமயத்தில் சோ ஜெ யு என்பவர் புதிய இயக்கத்தை தொடங்கினார். கிறிஸ்தவ ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தவும், சீனாவைப் போல கொரியாவை பிரிட்டனும் பிரான்சும் ஆக்கிரமிக்காமல் தடுக்கவும், கொரியாவில் ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் அமல்படுத்த வேண்டும். தேசியவாதம், சமூகசீர்திருத்தம் வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம், வழக்கமாக கொரியா விவசாயிகள் மத்தியில் இருந்த கொரில்லா போராளிகளை உசுப்பிவிட்டது. புரட்சிகர அமைப்புகள் உருவாகி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, சோ ஜெ யு மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு 1864 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் மலைகளில் சென்று ஒளிந்துகொண்டனர்.

 

 

 

இந்நிலையில்தான் கோஜோங் என்ற 12 வயது சிறுவன் கொரியாவின் மன்னரானார். இவருடைய ஆட்சிக் காலத்திலும் உறவினர்களின் ஊழல் குறையவில்லை. அரசு நிர்வாகத்துக்கு இணையாக சோவோன் என்ற தனியார் நிறுவனங்கள் போட்டி நிர்வாகத்தை நடத்தின. மேற்கத்திய சிந்தனைகளும், தொழில்நுட்பங்களும் கொரியாவில் நுழைவதைத் தடுக்க கொரியா தன்னை தனிமைப்படுத்த முடிவெடுத்தது. இதையடுத்து, 1873 ஆம் ஆண்டு மன்னர் கோஜோங்கிற்கு கட்டாய ஒய்வு கொடுத்துவிட்டு, ராணி மியோங்சியோங் பொறுப்புக்கு வந்தார்.

 

அவர் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 1876 ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானின் சந்தையாக கொரியா மாற இந்த ஒப்பந்தம் வழிசெய்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, ஜப்பான் சீனாவின் பிடியிலிருந்த நாடு என்ற நிலை மாறி, கொரிய துறைமுகங்கள் அனைத்தும் ஜப்பானிய வர்த்தகத்துக்கு திறந்துவிடப்பட்டன.

(இன்னும் வரும்)

 

முந்தைய பகுதி:

 

2 லட்சம் கொரியர்களின் மூக்கை நறுக்கிய ஜப்பான்! கொரியாவின் கதை #4
 

 

 

 

 

Next Story

கியூபாவுக்கு மாடல் வடகொரியா என்றார் சே குவேரா! கொரியாவின் கதை #26

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
koreavin kathai

 

சோவியத் ரஷ்யாவையோ, சீனாவையோ சார்ந்த நாடு அல்ல. வடகொரியா என்பது கொரியர்களின் தனித்தன்மை கொண்ட நாடு. தனித்து தன்னை அடையாளப்படுத்தி வளர்ச்சி அடைந்தால்தான் தென் கொரியாவில் வாழும் சகோதரர்கள், அமெரிக்காவின் இருப்பை வெறுப்பார்கள் என்று கிம் இல்-சுங் நினைத்தார்.
 

ஸ்டாலினின் வழிமுறைகளை சோவியத் ரஷ்யாவின் ஜனாதிபதி குருசேவ் ஏற்க மறுத்ததை சீனா அங்கீகரிக்கவில்லை. சீனாவின் வழியிலேயே கிம் இல்-சுங்கும் ஆதரிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் கலாச்சார புரட்சி என்று மாவோ மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கிம் இல்-சுங் ஆதரிக்கவில்லை. அவரிடமிருந்து கிம் விலகியிருந்தார். சோவியத், சீனா ஆகியவற்றிடம் இருந்து சற்று விலகியிருந்த அதேவேளையில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகளுடன் கிம் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டார். அவை வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியில் நல்ல ஆதரவு அளித்தன.
 

கிழக்கு ஜெர்மனி, ரொமானியா, அல்பேனியா, யூகோஸ்லாவியா, ஜைரே ஆகிய நாடுகளின் அதிபர்கள் கிம் இல்-சுங்கின் ஆட்சியை விரும்பினார்கள். தலைமையைப் போற்றும் ஆட்சிமுறையை அவர் நடத்துவதைப் போலவே, தங்களுடைய நாடுகளிலும் அமல்படுத்த விரும்பினார்கள்.
 

1959ல் கியூபா புரட்சி வென்று அங்கு பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு அமைந்திருந்தது. அந்த அரசின் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த சே குவேரா வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் கிம் இல்-சுங்கின் நிர்வாகத்தை பார்த்தபிறகு, வடகொரியாவை கியூபா தனது மாடலாக பயன்படுத்தும் என்று கூறினார். அந்த அளவுக்கு கிம் வடகொரியா மக்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தார். எல்லா பிரச்சனைகளையும் மக்களோடு இருந்து எதிர்கொண்டார்.


 

koreavin kathai


 

1960களில் வியட்னாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்னாமும் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. வட வியட்னாம் ஹோ சி மின் தலைமையில் கம்யூனிஸ்ட் நாடாகவும், தென் வியட்னாம் அமெரிக்காவின் பிடியிலும் இருந்தது. ஆனால், அங்கு இரண்டு வியட்னாம்களையும் இணைப்பதில் ஹோ சி மின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு வியட்னாம்களின் மக்களும் இணைய விரும்பினர். எனவே, அமெரிக்காவால் வட வியட்னாமின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. முடிவில் தென் வியட்னாமிலிருந்து அமெரிக்க ராணுவம் தோற்றோடியது. அந்தப் போராட்டத்தை கவனித்துவந்த கிம் இல்-சுங், அதுபோன்றதொரு போராட்டத்தை தென் கொரியாவுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று விரும்பினார். இதற்காக கொரில்லா தாக்குதல் தந்திரத்தை அவர் பலமுறை கையாண்டார். தென்கொரியாவுக்குள் அதிரடிப்படை ஊடுருவல், எல்லையோரத்தில் அமெரிக்க ராணுவத்தினருடன் அடிக்கடி துப்பாக்கி தாக்குதல் என வடகொரியா அடிக்கடி சண்டையில் ஈடுபட்டது. தென்கொரியாவின் ஜனாதிபதியாக இருந்த பார்க் சுங்-ஹீயை கொலை செய்ய குடியரசுத்தலைவர் மாளிகைக்குள்ளேயே வடகொரியா அதிரடிப்படை புகுந்த சம்பவமும் நடந்தது.
 

1968 ஆம் ஆண்டு வட வியட்னாம் மக்கள் ராணுவமும், வியட்காங் கொரில்லா குழுவும் தென் வியட்னாம் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. தென்வியட்னாமில் உள்ள 800 நகரங்களில் முக்கிய ராணுவ தளங்கள் அனைத்தின் மீதும் வடவியட்னாம் கொரில்லாக் குழுக்கள் தாக்குதல் நடத்தினால், மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும், வியட்னாம் இணைப்பு எளிதில் சாத்தியம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதல் வியட்னாம் புத்தாண்டு அன்று தொடங்கியது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்ஸன் வடவியட்னாமுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக அறிவித்தார். அவர் பேசிய மூன்றாவது நாள் வடகொரியா அதிரடிப்படை குழுவினர் 31 பேர் தென்கொரியாவுக்குள் நுழைந்தனர். ஜனாதிபதி பார்க்கை கொல்ல நடந்த முயற்சியில் தென்கொரியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். தென்கொரியா ஜனாதிபதி பார்க்கை கொலை செய்யும் முயற்சி 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தவுடன், அடுத்த இரண்டாம் நாள், தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பியூப்லோ என்ற கப்பலை 83 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் வடகொரியா கைப்பற்றியது. அப்போது நடந்த சண்டையில் அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
 

அந்தக் கப்பல் தனது கடல் எல்லைக்குள் பலமுறை ஊடுருவியிருப்பதற்கு வடகொரியா ஆதாரங்களைக் கொடுத்தது. ஆனால், அமெரிக்காவோ தனது கப்பல் சர்வதேச எல்லையில்தான் இருந்தது என்று பிடிவாதம் பிடித்தது. சுமார் 11 மாதங்கள் அமெரிக்க வீரர்களை வடகொரியா சிறை வைத்திருந்தது. பின்னர் அமெரிக்கா முறைப்படி மன்னிப்புக் கேட்டதால் வீரர்களை மட்டும் விடுவித்தது. இப்போதும் அந்தக் கப்பல் தலைநகர் பியாங்யாங்கில் போடாங் நதியில் போர் அருங்காட்சியகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
 

வியட்னாமில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில், கப்பலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இசி-121 ரக போர் விமானத்தை வடகொரியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருந்தது. அப்போது நிக்ஸன் தலைமையில் அரசு இருந்தது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்தால், கொரியாவில் ஏற்படும் போரை சமாளிக்க தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று நிக்ஸன் கருதினார்.
 

இந்நிலையில்தான், 1972 ஆம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே இணைப்பு முயற்சிகள் குறித்து முதல் கூட்டம் பியாங்யாங்கில் நடைபெற்றது. இதற்கு காரணம் வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சிதான் என்று கூறப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலேயே வடகொரியா பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டது. இந்த வளர்ச்சியை மிகப்பெரிய மாயாஜாலம் என்று பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜோன் ராபின்ஸன் வியந்து எழுதியிருக்கிறார்.


 

koreavin kathai

 

அதாவது, தென்கொரியாவில் ஏழைகளையும், சாலையோர குடியிருப்புவாசிகளையும் கொன்று குவித்து தலைநகர் சியோலை சுத்தமான நகரம் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருந்த சமயத்தில் வடகொரியா தனது மக்களுக்கு எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்து, எல்லோரும் சமம் என்பதை நிலைநாட்டியிருந்தது.
 

பொருளாதாரத்திற்காக அமெரிக்காவிடம் தனது படைவீரர்களை விலைக்கு விற்று பலிகொடுத்துக் கொண்டிருந்த தென்கொரியா வடகொரியாவின் முன்னேற்றத்தைப் பார்த்து வியந்துகொண்டிருந்தது.
 

வடகொரியா தனது சுதந்திரத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக 1975 ஆம் ஆண்டிலேயே அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, 1968 ஆம் ஆண்டிலேயே வடகொரியாவில் எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. 1972 ஆம் ஆண்டிலேயே 5 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. 200க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், சிறப்பு கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 1980களின் தொடக்கத்திலேயே மொத்த ஜனத்தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேர் நகர்மயப்படுத்தப்பட்டார்கள். அது இப்போது முழுக்கமுழுக்கவே நகர்மயப்படுத்தப்பட்டுவிட்டது.
 

வடகொரியாவின் இந்தச் சாதனைக்கு கிம் இல்-சுங் அறிமுகப்படுத்திய ஜுச்சே என்ற கோட்பாடுதான் முக்கிய காரணம். ஜுச்சே என்பது கொரிய மக்களுக்கான புரட்சிகர கோட்பாடு. அதாவது, கொரியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால், கொரியாவின் வரலாறையும், புவியியல் தன்மைகளையும், கொரியா மக்களின் பழக்கவழக்கங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்களுடைய மண்ணை நேசிக்கும் வகையில் கற்பிக்க முடியும் என்று 1955 ஆம் ஆண்டிலேயே கிம் இல்-சுங் பேசியிருந்தார். அந்த அடிப்படையில்தான், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ஜுச்சே கோட்பாடின் மூன்று அடிப்படை விஷயங்களை மக்களுக்கு அறிவித்தார் கிம். அதாவது, அரசியல் சுதந்திரம், பொருளாதார தன்னிறைவு, பாதுகாப்பில் தன்னிறைவு ஆகியவைதான் வடகொரியாவின் இலக்கு என்றார்.
 

அந்த மூன்று விஷயங்களிலும் வடகொரியா தன்னிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இந்த தன்னிறைவு அடைவதற்குள் அது சந்தித்த தடைகள் ஏராளம். வடகொரியா தனது மின் தேவைகளுக்காக அணு உலைகளை உருவாக்க தொடங்கியதும் அதையே காரணமாக காட்டி வடகொரியாவை ரவுடி நாடு என்றும், அது அணு ஆயுதங்களைத் தயாரிப்பது உலகின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் அமெரிக்கா கூப்பாடு போட்டது. சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகள், உலகம் முழுவதும் இருந்த சோசலிஸ்ட் நாடுகள் வடகொரியாவுக்கு உதவிகளை அளித்தன. வடகொரியா தனது கனிம வளங்களை ஏற்றுமதி செய்து தனது சொந்த தேவைகளுக்கான தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துகொண்டது.
 

வெளிநாடுகளில் கடன்களை வாங்கி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை வடகொரியா கட்டியது. இதையடுத்து, சீனா மற்றும் சோவியத் ரஷ்யாவிடமிருந்து பெறும் பாதுகாப்பு உதவிகளைக் குறைத்துக் கொண்டது. பெட்ரோகெமிகல், ஜவுளி, கான்கிரீட், உருக்கு, காகிதம் என்று பல்வேறு தொழிற்சாலைகளுக்கான பாகங்களை முன்னேறிய நாடுகளிடமிருந்து வடகொரியா பெற்றுக்கொண்டது. ஜப்பான் உதவியோடு, உலகின் மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலையையும் வடகொரியா கட்டியது.
 

1973ல் உருவான பெட்ரோல் விலை சரிவு வடகொரியாவை வெகுவாகப் பாதித்தது. இதன்விளைவாக வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதுவும் வடகொரியாவுக்கு நல்லதே செய்தது. வடகொரியர்கள் தங்களுடைய தொழில்நுட்பத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளத் தயார் ஆனார்கள். தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த வகையில் வடகொரியாவுக்கு உதவியாக இருந்தன.

 

koreavin kathai


 

இவ்வளவு சிக்கல்களுக்கும் இடையில் வடகொரியா தனது கனவுத் திட்டங்களாக கையிலெடுத்த ஜுச்சே கோட்பாடுக்கான நினைவுக் கோபுரம் கட்டுவதையும், நாம்போ அணையைக் கட்டுவதிலும், ரியுக்யாங் ஹோட்டலைக் கட்டுவதிலும் உறுதியாக இருந்தது. அத்துடன், 1988ல் தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு போட்டியாக உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான 13 ஆவது உலகத் திருவிழாவை வடகொரியா தனது தலைநகர் பியாங்யாங்கில் நடத்தியது. இந்தப் போட்டிகளை சோசலிஸ மற்றும் கம்யூனிஸ நாடுகள் மட்டுமே ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உலக அமைதிக்கான அடையாளமாக நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

1980களில் கிம் இல்-சுங் சோவியத் ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, போலந்து, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா, யூகோஸ்லாவியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அதிக அளவிலான முதலீடுகளை பெற்றுவந்தார். ஆனால், சோவியத் ரஷ்யாவில் மிகைல் கோர்பசேவ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் அங்கு சீர்குலைவு ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. இது வடகொரியாவுக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது. ஆனால், அதையும் வடகொரியா தனக்கான பாடமாக எடுத்துக்கொண்டு, ஜுச்சே கோட்பாடுகளில் இருந்த குறைகளை சரிசெய்துகொண்டது.
 

இந்தக் காலகட்டத்தில் கிம் இல்-சுங்கின் மகன் கிம் ஜோங்-இல் ஆட்சி நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் பொறுப்புக்கு வந்துவிட்டார். சோவியத் ரஷ்யாவும், உலகின் முக்கியமான கம்யூனிஸ, சோசலிஸ நாடுகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில், வடகொரியாவையும் சீர்குலைக்க அமெரிக்கா பல திட்டங்களைத் தீட்டியது. வடகொரியாவின் அணுஆயுத முயற்சிகளைக் காரணமாக காட்டி அந்த நாட்டின் மீது ஐ.நா.உதவியோடு பொருளாதாரத் தடைகளை விதித்தது.
 

ஆனால், அந்தத் தடைகளைத் தாண்டி வடகொரியா தனித்து நின்று சமாளித்து, தனது ஆயுதத் தேவைகளில் தன்னிறைவு அடைந்தது. அமெரிக்காவையே மிரட்டும் அளவுக்கான கண்டம்விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்களையும், அணு ஏவுகணைகளை எதிர்த்து தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணைகளையும் வடகொரியா தயாரித்தது.
 

வடகொரியாவுக்கு உதவும் நாடுகள் நெருக்கடியில் சிக்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்தும் வடகொரியா சுயமாக மீண்டது. சீனா மட்டுமே வெளிப்படையாக உதவும் நாடாக இருந்தது.
 

1994 ஆம் ஆண்டு கிம் ஜோங்-இல் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய மரணம் உலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. பதப்படுத்தப்பட்ட அவருடைய உடல் இன்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய தந்தையை இழந்ததைப் போல கதறித் துடித்தார்கள். அவருடைய இறுதி ஊர்வலம் இன்றைக்கும் உலக சாதனையாக கருதப்படுகிறது. காணொளிக் காட்சியாக இன்றைக்கும் இணையத்தில் கிடக்கிறது.
 

அவருடைய மரணம் வடகொரியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும், நிர்வாகத்தில் எந்த தொய்வையும் ஏற்படுத்திவிடவில்லை.



முந்தைய பகுதி:

சோவியத், சீன சதியை முறியடித்த கிம் இல்-சுங்! கொரியாவின் கதை #25
 

 

 

Next Story

சோவியத், சீன சதியை முறியடித்த கிம் இல்-சுங்! கொரியாவின் கதை #25

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
koreavin kathai

 

கொரியாவின் சுயமரியாதையை காப்பாற்ற வந்த சூரியக்கடவுள் என்று வடகொரியா மக்கள் நம்பும் வகையில் கிம் இல்-சுங்கின் நடவடிக்கைகள் இருந்தன. வடகொரியாவில் யாரும் முதலாளி இல்லை என்ற நிலையை உருவாக்கியிருந்தார். எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்திருந்தார்.

 

அதையெல்லாம்விட கொரியா தீபகற்பத்தை இணைப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியை வடகொரியா மக்கள் விரும்பினார்கள். தென்கொரியாவில் தங்களுடைய சகோதரர்களும் சகோதரிகளும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவுகளையும் சுற்றத்தினரையும் பிரித்துவைக்கும் இரண்டு கொரியாக்களின் எல்லையை உடைத்தெறிய வேண்டும் என்று விரும்பினார்கள். தென்கொரியாவில் இருந்த அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமேன் அணுகுண்டு சோதனைகளுக்கும், ராணுவ திட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடை வெகுவாக குறைத்திருந்தார். இந்தச் சமயத்தில் தென்கொரியா மீது போர்தொடுத்தால் எளிதில் இணைத்துவிடலாம் என்று கிம் இல்-சுங் கருதினார். இதற்கான ஆதரவை சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் கேட்டார். அவரும் நிலைமை சாதகமாக இருப்பதாகத்தான் நினைத்தார். எனவே, தாக்குதல் திட்டத்துக்கு சோவியத் ஆதரவளிக்கும் என்றார். அதைத்தொடர்ந்து சீனாவிடம் கிம் ஆதரவு கேட்டார். ஆனால், சீனா உடனடியாக நேரடி ஆதரவளிக்க மறுத்துவிட்டது. ஆனால், மறைமுக உதவிகளை அது அளித்தது.

 

koreavin kathai


 

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி தாக்குதல் தொடங்கிய நான்கே நாட்களில் வடகொரியா ராணுவம் சியோலை நெருங்கிவிட்டது. இதையடுத்து ஜனாதிபதி ரீ சியோல் நகரைவிட்டு வெளியேறினார். அதற்கு முன்னதாக வடகொரியா ராணுவத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஹான் நதியின் குறுக்கே இருந்த ஹாங்காங் பாலத்தை வெடிவைத்து தகர்த்தனர். அது தகர்க்கப்படும் சமயத்தில் சுமார் 4 ஆயிரம் அகதிகள் அந்த பாலத்தில் சியோலை விட்டு கடந்துகொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பாலம் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவசரகதியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஜூன் 28 ஆம் தேதி சியோல் வடகொரியாவின் பிடியில் விழுந்தது. அதேதினம், தென்கொரியாவில் உள்ள தனது அரசியல் எதிரிகள் அனைவரையும் கொன்றுவிடும்படி ஜனாதிபதி சிங்மேன் ரீ உத்தரவிட்டார்.

 

போர் தொடங்கிய ஐந்தே நாட்களில் 95 ஆயிரம் பேர் கொண்ட தென்கொரியா ராணுவம் 22 ஆயிரம் பேரை இழந்தது. தென்கொரியாவின் வடகிழக்கு பகுதி மட்டுமே மிச்சமிருந்த நிலையில் அமெரிக்க ராணுவமும், ஐ.நா. படையும் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன. ஜூலை மாத தொடக்கத்தில் தென்கொரியா வந்த அமெரிக்க ராணுவத்தின் கீழ் தென்கொரியா படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டன.

 

அதன்பின்னர், அடுத்த சிலநாட்களில் வடகொரியா ராணுவத்திடமிருந்து சியோல் மீட்கப்பட்டது. அதுமட்டுமின்றி வடகொரியா படைகள் வடக்கு நோக்கி பின்வாங்கின. அக்டோபர் 19 ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கை கைப்பற்றியது. கிம் இல்-சுங்கும் அவருடைய அரசும் வடக்குப்பகுதிக்கு விரைந்தது.

 

koreavin kathai


 

இந்தச் சமயத்தில் சீன அரசு ஐ.நா.படைகளின் முன்னேற்றத்தை நிறுத்தும்படி பல எச்சரிக்கைகளை விடுத்தது. ஆனால், ஐ.நா.படைகள் கேட்கவில்லை. பின்னர் நடந்தது அதிரடி தாக்குதல், சீனாவையும் கொரியாவையும் பிரிக்கும் யாலு நதியை பல்லாயிரக்கணக்கான சீன வீரர்கள் கடந்தனர். அவர்கள் கொரியா ராணுவத்துடன் இணைந்தனர். டிசம்பரில் பியாங்யாங்கிலிருந்து ஐ.நா.படை வெளியேற்றப்பட்டது. அடுத்து ஜனவரி 1951ல் தென்கொரியா தலைநகர் சியோலையும் சீனப்படைகள் மீண்டும் கைப்பற்றின. மார்ச் மாதம் சியோலை கைப்பற்ற ஐ.நா.படைகள் அதிகளவு குவிக்கப்பட்டு மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது. சியோலை மீட்ட ஐ.நா.படைகள் சீனப் படைகளை பின்வாங்கச் செய்தன. இரு நாடுகளின் எல்லையான 38 ஆவது நிலநேர்கோடு அருகே சென்றதும் ஐ.நா.படைகள் தாக்குதலை நிறுத்தின. அந்தப் பகுதியில் இரு படையினருக்கும் கடுமையான யுத்தம் 1953 ஜூலை வரை நடைபெற்றது. எந்தவித சண்டைநிறுத்த ஒப்பந்தமும் இல்லாமல், அமைதி உடன்படிக்கையும் இல்லாமல் 1953 ஜூலை 27 ஆம் தேதி யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் இருதரப்பிலும் 25 லட்சம் பேர் பலியாகினர்.

 

இந்தச் சண்டையின்போது வந்த சீன ராணுவமும், சோவியத் ராணுவமும் பெரும்பகுதி வடகொரியாவில் நிலைநிறுத்தப்பட்டன. வடகொரியா தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவிலும் சீன ஆதரவாளர்கள், சோவியத் ஆதரவாளர்கள் என அணிகள் இருந்தன. கிம் ஆதரவாளர்களைக் காட்டிலும் அவர்கள் குறைவு என்றாலும் கிம்மின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு கட்சிக்குள் உருவானது.

 

மூன்றாண்டுகள் நடந்த கடுமையான யுத்தத்தால் வடகொரியாவின் பொருளாதாரமும் உள்கட்டமைப்புகளும் சீர்குலைந்திருந்தன. அதை சீரமைக்க ஐந்தாண்டு தேசிய பொருளாதார திட்டத்தை கிம் அறிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தேசவுடைமை ஆக்கப்பட்டன. விவசாயம் முழுமையாக கூட்டுப்பண்ணை மயமாக்கப்பட்டது. பொருளாதாரம் முழுக்க முழுக்க கனரக தொழில்கள் மற்றும் ஆயுத உற்பத்தியை நோக்கி திருப்பப்பட்டது. எல்லைப்பகுதியில் ஆயுதம்தாங்கிய படையை அதிகரிக்கும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டது. தென்கொரியாவுக்கு அமெரிக்க ராணுவம் காவல் இருந்தது.

 

koreavin kathai


 

என்னதான் இருந்தாலும் வடகொரியாவும் கிம் இல்-சுங்கும் சீனா அல்லது ரஷ்யாவைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை இருந்தது. சர்வேதச அளவில் சீனா மற்றும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே போட்டி தொடங்கியது. சீன ஆதரவு நாடுகள், சோவியத் ஆதரவு நாடுகள் என்று உருவாகத் தொடங்கின. உலகின் வளர்முக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சீன ஆதரவு நிலைப்பாடும் சோவியத் ஆதரவு நிலைப்பாடும் எடுக்கத் தொடங்கின. சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சிமுறையை மாற்ற புதிய அதிபர் நிகிடா குருசேவ் முடிவெடுத்தார். இதை மாவோ ஏற்கவில்லை. கிம் அவருடைய அணியில் சேர்ந்தார். ஆனாலும் அவர் மாவோயிஸ்ட் இல்லை. அதேசமயம் கொரியா கம்யூனிஸ்ட் இயக்கத்தை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவந்தார். கட்சிக்குள் இருந்த அவருடைய எதிரிகளான பாக் ஹான்-யோங்கிற்கு மரணதண்டனை விதித்தார். 1955ல் ஜுச்சே என்ற அறிக்கையை கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அளித்தார். அது சோவியத்தையோ, சீனாவையோ சாராமல் கொரியாவின் தனித்துவத்தை வலியுறுத்தியது. கொரியாவின் தன்னிறைவை நோக்கி அது இருந்தது. கிம்மின் இந்த அறிக்கைதான் கட்சிக்குள் விமர்சனத்தை உருவாக்கியது. சோவியத் ஆதரவாளரான பாக் ஹான்-யோங் கிம்மின் இந்த அறிக்கையை எதிர்த்தார். கிம்மின் ஜுச்சே அறிக்கை 1963 ஆம் ஆண்டுக்கு பிறகே அதிகமாக பேசப்பட்டது.

 

கிம் இல்-சுங் தன்னை முன்னிறுத்தி தலைமைக்கு துதிபாடும் போக்கை வளர்ப்பதாகவும், ஸ்டாலின் தொடங்கிய அந்த போக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று குருஷேவ் தலைமையிலான 20 ஆவது சோவியத் கம்யூனிஸ்ட் மாநாடு முடிவெடுத்தது. சோவியத் ஆதரவு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள் அனைத்திலும் தனிமனித துதிக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமடைந்தது. அத்தகைய சூழலில் கிம் இல்-சுங்கை சோவியத் யூனியன் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆறுவார பயணமாக அவர் அழைக்கப்பட்டார். சோவியத் யூனியனின் புதிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப வடகொரியாவை மாற்ற குருஷேவ் விரும்பினார். கிம் வடகொரியாவில் இல்லாத நிலையில் அவருக்கு எதிரான சதியில் சோவியத் ஆதரவுத் தலைவரான பாக் சாங்-ஓக், சோயே சாங்-இக் ஆகியோரும், சீன ஆதரவுக் குழுவின் தலைவர்களும் கிம் இல்-சுங்கிற்கு எதிராக ஒரு திட்டத்தை வகுத்தனர். அடுத்துவரும் மத்தியக் குழுவில் கிம் தனது தலைமைப் பண்புகளை மாற்ற வேண்டும். தனிமனித துதியை ஊக்குவிக்கக்கூடாது. லெனின் வகுத்த பாதையை மாற்றக்கூடாது என்று விமர்சனங்களை முன்வைப்பது என்று முடிவெடுத்தனர்.

 

koreavin kathai


 

வடகொரியா திரும்பிய கிம் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் கிம்மிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு கிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கட்சிவிரோத நடவடிக்கைக்கு உள்ளாக்கும்படி வற்புறுத்தினர். இதையடுத்து எதிர்த்தோர் நீக்கப்பட்டனர். சீனா ஆதரவுத் தலைவர்கள் சிலர் சீனாவுக்கே சென்றனர். சோவியத் ஆதரவாளர்கள் பலர் காணாமல் போயினர். 1956 செப்டம்பரில் சோவியத் மற்றும் சீனத் தூதுக்குழு வடகொரியாவுக்கு வந்தது. கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக யாரையும் கொல்லக்கூடாது என்று வற்புறுத்தின்ர. ஆனால், 1957ல் மீண்டும் எதிரிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை தொடங்கின. அதைத்தொடர்ந்து சோவியத் ஆதரவாளர்கள் சோவியத்துக்கும், சீனா ஆதரவாளர்கள் சீனாவுக்கும் செல்லும்படி நிர்பந்தம் செய்யப்பட்டனர்.

 

1961ல் கட்சிக்குள் கிம்மின் கொரில்லா குழுவும், அவருக்கு விசுவாசமான தலைவர்களும் மட்டுமே இருந்தனர். 1961ல் கட்சியின் மத்தியக்குழுவில் இரண்டு சோவியத் ஆதரவு உறுப்பினர்களும், சீன ஆதரவு உறுப்பினர்கள் மூவரும், வடகொரியாவில் பிறந்த ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர்களி பிரதிநிதிகளாக மூவரும் இருந்தனர். மொத்த மத்தியக்குழு உறுப்பினர்கள் 68 பேரில் 8 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் கிம்மின் கொரில்லா குழுவைச் சேர்ந்தவர்கள். அந்த 8 பேரும்கூட கிம்மை ஆதரிப்போராக இருந்தார்கள். அவர்களும் காலப்போக்கில் கட்சிக்குள் இல்லாமல் போயினர்.

 

koreavin kathai


 

கட்சிக்குள் கிம் இல்-சுங்கிற்கு இருந்த ஆதரவுக்கு ஒரு காரணம் இருந்தது. சோவியத்தையோ, சீனாவையோ ஆதரிக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் இளம் உறுப்பினர்கள் வெளிநாட்டு ஆதரவாளராகவே பார்த்தனர். அதேசமயம், கிம் இல்-சுங் மட்டுமே உண்மையான கொரியா தலைவராக பார்த்தனர். கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்ததும், வடகொரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கொஞ்சநஞ்சம் சீனா, சோவியத் ராணுவத்தையும் அனுப்பினார் கிம்.

(இன்னும் வரும்)

 

 

முந்தைய பகுதி:


கிம் இல்-சுங்கின் பாதை தனி பாதை! கொரியாவின் கதை #24