Skip to main content

குழி தோண்டிப் புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்து... ஆட்டோ சங்கர் #14

Published on 29/07/2018 | Edited on 25/08/2018
as 14 title



லலிதா இறந்து போய் விட்டாள் என்பதையே உணரவில்லை! மயங்கியிருக்கிறாள் என்றே திடமாக நம்பினேன். நீர் தெளித்துக் கொண்டிருந்தேன்   முகத்தில்! எத்தனையோ முறை தண்ணீர் விட்டுப் பார்த்தும் துளி சலனமில்லை; கைகால்களில் அசைவுமில்லை; நிலைமை புரிபட, உறைந்து போனேன்.

"கொ... கொலை பண்ணிவிட்டேனா?'

நினைத்துப் பார்க்கவே நடுக்கமாயிருந்தது. கண்களுக்குள் நெருப்பை அள்ளிப் போட்டு இமைகளை கோணி ஊசியால் தைத்துவிட்டது போல் இருந்தது. முகத்தில் அறைந்து கொண்டு கதறி அழுதேன்! தேர்தலுக்கு அப்புறம் மாயமாகி விடுகிற எம்.எல்.ஏ. கணக்காய், போதை எப்போதோ தொலைந்து போயிருந்தது.

 

 


அழுதேன்! உலகத்து துக்கத்தை எல்லாம் மொத்தக் குத்தகைக்கு எடுத்தவன் போல அப்படி ஒரு அழுகை! லலிதாவை இழந்ததற்காக அல்ல. என்னை  இழந்ததற்காக! போதையில் தன்னை இழந்து, ஆத்திரத்தில் நிதானத்தை இழந்து, ஆணவத்தில் அறிவை இழந்து! கொலைகாரப் பாவம் ஒன்று   பாக்கியிருந்தது. அதையும் செய்தாயிற்று. ஏதோ உணர்ச்சிவசப்பட்டதில் செய்த காரியமென்றாலும் தவறு தவறுதானே?

வேர்த்து விறுவிறுத்து, வீட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு சாராயக் கடைக்குப் பறந்தேன். சகாக்களின் காதுகளில் விஷயத்தை விதைத்தேன்!மோகன், எல்டின், சிவாஜி, பாபு என மொத்த "கேபினெட்”டும் யோசித்தது! சாராய குடவுனுக்குள் லலிதாவைக் கொண்டு வந்தார்கள்! பார்த்தவர்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை! கள்ளச் சாராயம் என்று நினைத்துக்கொண்டனர். நடுநிசியில் அங்கே இப்படி சரக்கு வருவது வழக்கமான ஒன்றுதானே?!

 

 

auto



ஆறடி ஆழத்திற்கு நான்கு பேருமாக குழி தோண்டினோம்! தரையில் கடப்பாரை மோதும் சத்தத்தால் யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாதே! டேப் ரிக்கார்டில் டி.எம்.எஸ்.ஸும், பி.பி.எஸ்.ஸும், சீர்காழியும் அலறித் தீர்த்தனர்.

"பொன் ஒன்று கண்டேன்!
பெண் அங்கு இல்லை...
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?''

நாலைந்து திடகாத்திரர்களும் இரண்டு ஃபுல் பேக்பைப்பருமாக சேர்ந்துகொண்டு ஆறடி குழியை உருவாக்கிவிட முடியாதா என்ன?நிமிஷமாய் தயாராயிற்று. தரை வாயைப் பிளந்துகொண்டு நிற்க, முன்பே வாயைப் பிளந்திருந்த லலிதா சாக்குமூட்டையிலிருந்து வெளியே  உருவப்பட்டாள். வளையல், காதுத்தோடு... என நகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்து வைத்துக்கொண்டோம்! உடுத்தியிருந்த துணிமணி கூட   நீக்கப்பட்டு பூஜ்ஜியமானாள்! குழி நோக்கி உருட்டி விடப்பட்டாள்!

 

 


அம்பாரமாய் குவிந்து கிடந்த மணலை அவள் மீது கொட்டி குழியை மூடினோம். பகலில் தயாராக வாங்கி வைத்திருந்த சிமெண்டை நீரில் கரைத்து மேலே புதுசாய் தளம்... உள்ளுக்குள் பிணத்தை ஒளித்து வைத்திருப்பதைக் காட்டிக்கொள்ளாது 'சாது'   போஸ்   கொடுத்தது தரை...! மீதமிருந்த மணல் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது.

"சங்கர்... நாளைக்கு ஒரு நா கடை லீவு விட்டுருவோம்! நாளை ராத்திரி பூசின இடத்திலே நல்லா தண்ணீ தெளிச்சுட்டா தரை இறுகிடும்! சாராய   கேனையெல்லாம் இங்கே கொண்டு வந்து அடுக்கிடுவோம். சரிதானே?'' ஒப்புக் கொள்ளப்பட்டது. அவ்வளவு பேரும் குழாய் திறந்து அலுப்பு தீர குளித்தோம்! துணியிலிருந்து அழுக்கெல்லாம் நீரில் அடித்துக் கொண்டு ஓடினது.

 

 

drinking



குளித்துவிட்டு வந்ததும் மறுபடி அலமாரி திறந்து விஸ்கி பாட்டிலை வெளியே எடுத்தோம். போதையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாயிற்று.கழுத்து முட்டும் அளவு குடித்துவிட்டு, மூச்சு முட்டும் அளவு சாப்பாடு! சிக்கன் 65, ஆஃப்பாயில், தலைக்கறி   என சகலமும் வயிற்றில் புதைத்தோம். லலிதாவை தரையில் புதைத்தோமே... அதேமாதிரி!

 

 


மறுநாள் பகல் முழுக்க அடித்துப்போட்ட மாதிரி அசதியான தூக்கம். முந்தின தினத்து அசதி! இரவு அனைவரும் மறுபடி தங்கள் வேடந்தாங்கலுக்கு   வந்தார்கள் இளைப்பாற! எனக்கு மட்டும்தான் சங்கடமாயிருந்தது. மற்றவர்களுக்கு லலிதாவின் மரணம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தினதாகத் தெரியவில்லை. கொஞ்சம் சந்தோஷம்கூடபட்டார்கள் என்று சொல்லலாம்! வெட்டியாய் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தவள் தொலைந்தாளே என்று சந்தோஷம்! பாபுவுக்கு சற்று அதிகப்படியாகவே மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சிக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 
 

அடுத்த பகுதி:

இரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர்! - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15 

முந்தைய பகுதி:

முதல் பெண்... முதல் கொலை...  ஆட்டோ சங்கர் #13

 

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23