Skip to main content

சீனப் பட்டும், சில்க் ரோடும்!!! உடையின் கதை #4

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

சீனர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது வெண்கல காலத்திலேயே, உடையை அணியத் தொடங்கி விட்டார்கள். சீனர்களின் உடை நாகரிகம் தொடர்ச்சியாக ஒரேமாதிரியாகவே இருந்தது. பட்டு, சணல், பருத்தி என்று எந்த உடையாக இருந்தாலும் இழுத்துக் கட்டும் வகையிலேயே இருந்தது.

 

udaiyin kathai



 

 

 

அவர்கள் எப்போதும் கம்பளி ஆடைகளை விரும்புவதே இல்லை. அது ஆடு, மாடுகள் மேய்க்கும் நாடோடிகள் அணியும் உடை என்பதே அவர்களுடைய கருத்தாக இருந்தது. வீடுகளில் பட்டுப்புழுக்களை வளர்க்கும் பழக்கம் கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அதற்கு ஒரு கதை உண்டு.

 

சீனத்து ராணி ஒருத்தி வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, முசுக்கட்டைச் செடியின் இலையில் பட்டுப் புழு கூடு கட்டியிருந்தது. அந்தக் கூடு வழவழப்பான நூலால் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ராணி அந்த கூட்டின் நூலை மெதுவாக இழுத்தாள். அது நீளமாக வந்துகொண்டே இருந்தது.

 

அவளுக்கு ஆச்சர்யம். மேலும்சில கூடுகளின் நூலை பிரித்தெடுத்தாள். பிறகு அந்த நூலைக் கொண்டு சிறிய துணியை பின்னினாள். பிறகு இந்தத் தகவலை பிறருக்கு சொன்னாள். அதைத் தொடர்ந்து, காடுகளில் பட்டுப் புழுக்களை தேடிப்பிடித்து நூல் எடுத்த சீனர்கள், பிறகு தங்கள் வீடுகளிலேயே பட்டுப் புழுக்களை வளர்க்கத் தொடங்கினர்.


 

udaiyin kathai


 

யாங்ஸே நதிக்கரை நாகரிகத்தில் பட்டு புழக்கத்தில் இருந்தது. கல்லறைகள், மண்பாத்திரங்கள், பீங்கான் பாத்திரங்களிலும், வெண்கலப் பாத்திரங்களிலும் பட்டு உடைகள் அணிந்த சித்திர வேலைப்பாடுகள் இருக்கின்றன. புராதனக் காலத்திலிருந்து பட்டு உடைகளே சீனர்களின் விருப்ப உடையாக இருக்கிறது.

 

 

 

உயர்வகுப்பினர் பட்டு உடைகளையும், கீழ்த்தட்டு மக்கள் சணல் உடைகளையும் அணிந்தனர். (கி.பி.1200களில்தான் சீனர்களின் முதன்மை உடை பருத்தியாக மாறியது குறிப்பிடத்தக்கது) கி.மு. 1500களில் நெசவுத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. பட்டு நூலில் நெய்யப்படும் துணி லேசாகவும், வழவழப்பாகவும், கதகதப்பாகவும் இருந்தது. எனவே, அந்தத் துணிக்கு மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.

 

ஷாங் பேரரசு காலத்திலேயே உடைகள் அணியும் பழக்கம் மேம்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட வெண்கல பாத்திரங்களில் உடையணிந்த மனிதர்களின் உருவம் இடம்பெற்றுள்ளது.

 

ஆண்களும், பெண்களும் நீண்ட கவுன் மாதிரியான உடைகளை அணிந்திருந்தனர். கி.மு.2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஸான்ஸிங்டுய் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலச் சிலை அணிந்துள்ள உடையில் பின்னல் வேலைப்பாடும் உள்ளது. வீரர்கள் நீண்ட உடையும், பெண்கள் பாவாடை ஜாக்கெட்டும் அணிந்திருந்தனர்.

 

சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் வரை, பட்டு தயாரிப்பு ரகசியத்தை சீனர்கள் தங்களுக்குள்ளேயே பொத்திப் பாதுகாத்து வந்தனர். வனத்தில் உள்ள ஏதோ ஒரு மரத்திலிருந்து பட்டு நூல் தயாரிக்கப் படுவதாக கிரேக்கர்கள் நம்பி வந்தனர். பட்டின் ரகசியத்தை அறிய கிரேக்கர்கள் ஆர்வமாக இருந்தனர்.

 

கி.மு.5 ஆம் நூற்றாண்டுகளில் பட்டுத் துணிகளில் வண்ணம் சேர்ப்பதில் சீனர்கள் திறமை பெற்றிருந்தனர். ஆசியாவின் பெரும்பகுதி நாடுகளில் சீன பட்டு புகழ்பெற்றிருந்தது. குய்ன் மற்றும் ஹான் பேரரசுகளில் சீனாவின் பெரும்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. குய்ன் பேரரசு காலத்தில் புதையுண்ட டெர்ரக்கோட்டா ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அணிந்திருந்த உடையை அறிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன.

 

udaiyin kathai


 

2200 ஆண்டுகளுக்கு முந்தைய ராணி டாய் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டபோது, உலகம் சீனாவின் உடை நாகரிகத்தை அறிந்துகொண்டது. அந்த ராணியின் உடல் நன்கு பதப்படுத்தப்பட்டிருந்தது. 20 சுற்றுகள் பட்டுத்துணிகளால் சுற்றப்பட்டிருந்தது. தவிர நூற்றுக்கணக்கான பட்டு உடைகளும், கால் மற்றும் கையுறைகள், செருப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் பத்திரமாக இருந்தன. அந்த உடைகள் சீனர்களின் நெசவு, மற்றும் வண்ணக்கலவை வேலைகளுக்கு சான்றாக இருக்கின்றன.

 

 

 

சுய் மற்றும் டாங் பேரரசுகளில் சீன கலாச்சாரம் மேம்பட்டது. சாங்கன் நகரம் மிகப்பெரிய நகரமாக உருவெடுத்தது. அன்றைய உலகின் மிகப்பெரிய காஸ்மோபாலிடன் நகரமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக ஃபேஷன் வளர்ந்திருந்தது.

 

டாங் பேரரசில்தான் மத்திய ஆசியா வழியாக சீனாவிலிருந்து சில்க் ரோடு உருவானது. அந்த ரோடு மத்தியக்கிழக்கு நாடுகளையும், பாரசீகம், துருக்கி போன்ற நாடுகளையும் இணைத்தது. பட்டு வியாபாரத்திற்காகவே அந்த பாதை கண்டுபிடிக்கப்பட்டது.. இதுதான் மிகப்பழமையான வர்த்தக பாதையாக கருதப்படுகிறது. இந்தப் பாதையின் நெடுகிலும் புதிய நகரங்கள் தோன்றின.


 

udaiyin kathai


 

பட்டு ரகசியத்தை சீனர்கள் யாருக்கும் சொல்லித்தராமல் மறைத்தே வைத்திருந்தனர். ஆனால், சீனாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக வந்த சாமியார்கள் பட்டுப் புழுக்களை சிரியாவுக்கு கடத்தினர். அங்கு பட்டுப் புழு உற்பத்தியை அறிமுகப்படுத்திய அவர்கள் பட்டுத் தொழில் மற்ற நாடுகளுக்கும் பரவ காரணமாக இருந்தார்கள். இன்றைக்கும் சீனாதான் பட்டுப்பூச்சி வளர்ப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

 

1911 ஆம் ஆண்டுவாக்கில்தான் சீனாவில் மேற்கத்திய உடை நாகரிகம் நுழையத் தொடங்கியது. மேற்கத்திய கம்பெனிகளில் வேலை செய்த சீனர்கள் கோட், சூட் அணிந்தனர். இந்த உடை சீனர்கள் மத்தியில் தொடக்கத்தில் வெறுப்பை ஏற்படுத்தினாலும், கிறிஸ்தவ பள்ளிகளின் சீருடை வழியாக அடுத்த தலைமுறையை எளிதில் கவரத் தொடங்கியது. சன் யாட் சென் காலத்தில் சீன உடைக் கலாச்சாரத்தில் புதிய புரட்சி ஏற்பட்டது. நகரங்களில்தான் மேற்கத்திய உடை நாகரிகம் முதலில் ஆக்கிரமித்தது.



முந்தைய பகுதி:

பனி மனிதன் அணிந்த உடை! உடையின் கதை #3

 

 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.