Skip to main content

தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #1

Published on 08/05/2018 | Edited on 21/05/2018
soller uzhavu

 

சொல்லறிவு என்னும் திறப்பு 

பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள். 
 

மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும். 
 

thiruvalluvar

 

 

 

எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு. 
 

 

 

சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை. 
 

அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது. 
 

நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது? 

 

 

 

அடுத்த பகுதியிலிருந்து (வரும் வெள்ளியன்று) நமக்குத் தெரியாத, நம் மொழியின் சொற்களை சுவாரசியமாக, மகிழ்ச்சியாக, வியப்புகளுடன் அறிந்துகொள்ளப் போகிறோம். 'நாம் தமிழர்' என்று பெருமை கொள்தல் மட்டும் போதுமா? நம் மொழியை அறிய வேண்டாமா... அறிவோமா?       


தொடரின் அடுத்த பகுதி :   

தமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #2

Next Story

கமல் பிடித்த பிடிவாதத்தின் விளைவு! - ரமேஷ் கண்ணா பகிரும் நினைவு!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
avvai shanmugi

 

நடிகர், இயக்குனர் ரமேஷ் கண்ணா, கமல்ஹாசனுடன் தனது அனுபவத்தை பகிர்கிறார்...

"கே.எஸ்.ரவிக்குமார் கூட வேலை செய்தபோது கமல் சார் கூட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூட அறிமுகமாகும்போதே கொஞ்சம் பிரச்சனையாதான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் கமல் சாரை வச்சு 'அவ்வை சண்முகி' படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஷூட்டிங் போற தேதியெல்லாம் முடிவாகி தயாராகிட்டோம். அமெரிக்காவிலிருந்து மேக்-அப் மேன் வந்துட்டார். ஆனால், கமலுக்கு மேக்-அப்ல திருப்தியில்லை. வேற ஏற்பாடு பண்ணனும்னு சொல்லிட்டார். எங்க டைரக்டருக்கு ஃபுல் டென்சன். அவர் எப்பவுமே சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டுக்குள் படமெடுத்துக் கொடுக்கிறவர். தயாரிப்பாளர்களின் இயக்குனர்னு அவரை சொல்லுவாங்க.

 

நாங்க போய் கமல் சாரைப் பாக்குறோம். "இப்போ வேற மேக்-அப் ஏற்பாடு பண்ணனும்னா நீங்க திரும்ப அமெரிக்கா போகணும். மோல்டு எடுக்கணும். இங்கயும் ஷூட்டிங் அதுவரை தள்ளிப்போகும்" என்றெல்லாம் விளக்கி அவரை கன்வின்ஸ் பண்ண முயன்றோம். அவர் கன்வின்ஸ் ஆகல. "அதனால என்ன, படம் நல்லா வரணும்"னு சொல்லி திரும்ப அமெரிக்கா கிளம்பிட்டார். ஒரு மாசம் கழிச்சுத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சது. அப்போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இதெல்லாம் கூடுதல் செலவுன்னு தோணுச்சு. ஆனால், படம் தயாரான பின்தான் எனக்குப் புரிஞ்சது, இந்த மேக்-அப் ஏன் தேவையென்று. அவரது பிடிவாதத்தின் விளைவுதான் அந்தப் படத்தின் தரம். அதை பிடிவாதம்னு சொல்லக்கூடாது, உறுதி. அவர் சிரத்தை எடுத்து போகாமல் இருந்திருந்தால், இப்பொழுதும் ஒரு ரெஃபரன்சாக இருக்கும் அளவுக்கு தரமா அது வந்துருக்குமா என்பது சந்தேகம்தான்.. இப்படி, கமல் சார் எப்பொழுதுமே தனக்கு திருப்தி வந்தால்தான் ஒரு செயலை முடிப்பார்.

 

avvai shanmugi getup

 

படம் துவங்குவதுக்கு முன்னாடி இப்படின்னா, ஷூட்டிங் அப்போ இன்னும் கடினமா உழைத்தார். அவருடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருக்கு. ஷூட்டிங் நடப்பது மகாபலிபுரம் பக்கத்துல ஒரு பங்களாவுல. அவர் வீட்டுல இருந்து அங்க வர அப்போதெல்லாம் இரண்டரை மணிநேரம் ஆகும். மேக்-அப் போட மூன்றரை மணிநேரம். 5.30 மணிக்கு ஆரம்பிச்சாதான் 9 மணிக்கு ஷூட்டிங் போக முடியும். அப்போ, ஆழ்வார்பேட்டையில் காலைல 2 மணிக்கு எழுந்து தினமும் ஷேவ் பண்ணிட்டு கிளம்பணும். இப்படி, தொடர்ந்து 55 நாட்கள் நடிச்சது எனக்குத் தெரிஞ்சு அவர்தான். வேற யாருகிட்டயும் இந்த அளவு உழைப்பை நான் பார்த்ததில்லை.

 

9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சு முதலில் க்ளோஸ்-அப் காட்சிகளை எடுப்போம். மேக்-அப் உரிவதற்கு முன்னாடி எடுக்கணும்னு அப்படி செய்வோம். அப்போதெல்லாம் கேரவன் கிடையாது. நாலு மர ஷீட்டை அடிச்சு அதுல விண்டோ ஏசி மாட்டி உள்ள உக்காந்திருப்பார். ஷூட்டிங் முடியும் வரை எதுவும் சாப்பிட முடியாது. ஆனா, அவர் அதுக்கெல்லாம் சளைத்தவரில்ல. சினிமாவுக்கெனவே வாழ்பவர். அவ்வை சண்முகி படத்துல நான் ஒரு சின்ன வேடத்தில் நடித்தேன். கமல் டான்ஸ் மாஸ்டர், நான் டைரக்டரா வருவேன்.  இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டுனதாக கிரேசி மோகன் என்கிட்டே சொன்னார். அது ஒரு மகிழ்ச்சி."  

 

 

Next Story

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

Published on 25/08/2020 | Edited on 25/08/2020
ramesh kanna



இன்னைக்கு என் ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு வாட்ஸப்பில் சில ஃபோட்டோக்கள் வந்தது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளுக்காக நிறைய மெஸேஜ்கள் வந்தன. அந்த கள்ளமில்லா சிரிப்ப சில நாட்கள் இடைவெளிக்குப் பின் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு மட்டுமில்ல, நெறய பேருக்கு அவர் உடல் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியாதான் இருக்கும். இன்னும் நெறய பேருக்கு அவரை பழையபடி பாக்கணும்னு ஒரு ஏக்கமே இருக்கும். நானும் அவர்களில் ஒருவன்.

என்ன காரணம்...? அவர் ரொம்ப வித்தியாசமானவர், தனித்துவமானவர். சினிமா உலகத்துல அவர் கண்டிப்பா தனித்துவமானவர்தான். ஏன்னா, சினிமாவில் இருந்தபோதும் சரி அரசியலுக்கு வந்தபின்னும் சரி, அவர் மக்களோட நெருக்கமா இருந்தார். அவர் அளவுக்கு ஃபேமஸான வேற எந்த ஹீரோவும் அவர் அளவுக்கு இறங்கி மக்களை சந்திக்கல, இறங்கி வேலைகள் செஞ்சதில்ல. அவரை நம்பலாம், அவரை நம்பி எதுவும் செய்யலாம், நம்புறவங்கள கைவிடமாட்டார். அந்த வகையில் அவர் உண்மையிலேயே  கேப்டன்தான்.

 

dharmachakkaram



1995-96 சமயம்... 'தர்மசக்கரம்' பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துக்கிட்டுருந்தது. நான் அஸோசியேட்டா வேலை செய்தேன். அந்தப் படத்துல ஒரு சின்ன கதாபாத்திரமும் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் விஜயகாந்த் சார்க்கு படம் பண்ணணும்னா முதலில் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்கிட்டதான் கதை சொல்லணும். நான், என் நண்பன் விவேக் கூடப் போய் ராவுத்தர்கிட்ட கதை சொன்னேன். அவர், "சூப்பரா இருக்கேப்பா... நீ போய் பொள்ளாச்சியில விஜிகிட்ட பேசு. நான் ஃபோன்ல சொல்லிடுறேன்"னு சொன்னார். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

தர்மசக்கரம் ஷூட்டிங்கும் அமைஞ்சதால அப்போவே விஜயகாந்த் சார்கிட்ட பேசுனேன். "கதை ராவுத்தர் கேட்டாச்சுல்ல, பிடிச்சுருச்சுன்னா ஒன்னும் கவலையில்ல பண்ணிடலாம். நீ கவலப்படாத"னு சொன்னார். சந்தோஷம் அதிகமாச்சு. எல்லாமே ஒத்து வந்தாலும் நம்ம ராசின்னு ஒன்னு இருக்கு. ராசி, அதிர்ஷ்டம் எல்லாம் நம்பாதவர்களைக் கூட சினிமா நம்ப வச்சுடும். அந்த அளவுக்கு நிலையாமை உள்ளது சினிமா. நான் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடிச்சுட்டு வருவதற்குள்ள இங்க சென்னையில கேப்டன் படம் இயக்குற வாய்ப்பையும் முடிச்சு வச்சுட்டாங்க. ஆமா, 'நானும் ரமேஷ்கண்ணாவும் சேர்ந்துதான் இந்தப் படத்தை இயக்கப் போறோம்'னு விவேக் சொல்ல, அது குழப்பமாகி அப்புறம் அந்த படம் இயக்கும் வாய்ப்பே போய்விட்டது.

 

 

 

vanathai pola



 

vanathai pola2



கோடி கோடி பேர் இந்த உலகத்தில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையென்பது ஒரு நூறு பேர் கூடத்தானே? சினிமாவில் இருக்கவங்களுக்கு வேணா அது ஒரு ஐநூறு பேரா இருக்கலாம். ஆனாலும் மனசுக்கு நெருக்கமானவங்க, மனமுவந்து பழகுறவங்கன்னு எடுத்துக்கிட்டா அதுக்குள்ளேதான் வரும். அந்த மாதிரி சுத்தி சுத்தி திரும்பவும் விஜயகாந்த் சார்கிட்ட வந்துட்டேன். ஆமா, விக்ரமன் சார் 'வானத்தைப் போல' படம் ஆரம்பிச்சார். அதுலயும் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்துல செந்தில் சார், நாங்க, எல்லாம் வச்சிருந்த கடையையும் அந்த வடையையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டாங்க. அந்த அளவு காமெடியிலும் சரி, சென்டிமென்டிலும் சரி, வானத்தைப் போல, வானத்தைப் போலதான். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். அடுத்து, 'மரியாதை' படத்திலும் அவருடன் நடித்தேன். ஆனால், கடைசி வரை அவருக்காக நான் ரெடி பண்ணிய கதையை அவரை வைத்து இயக்க முடியவில்லை. அவரை வைத்து எடுக்க முடியலையே தவிர அந்த கதை படமாகி வெற்றியும் பெற்றது. ஆமா, 'ஆதவன்' கதைதான் அது. சூர்யா நடிச்சார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார், நான் இயக்கவில்லை. ராசி... ராசி... ஹி... ஹி...

அரசியல் வருவதற்காக, வந்த பிறகு சிலர் சில புதிய விஷயங்களை செய்வார்கள். அதற்கு முன்ன அப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியாது. ஆனா, விஜயகாந்த் சார்கிட்ட ஏற்கனவே இருந்த விஷயங்கள், அவர் ஏற்கனவே செய்த செயல்கள், அவரை அரசியலுக்கானவராக உருவாக்குச்சு. படங்களில் தொடர்ந்து நடித்தபொழுதே ஷூட்டிங்கில் அவர் கேரவனிலோ தனியாகவோ போய் உட்கார்ந்து நான் பார்த்ததேயில்லை. நடுநாயகமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பார். ஷூட்டிங்குக்கு எதுவும் தேவையென்றால் உடனே ஏற்பாடு செய்வார். எல்லார்கிட்டயும் 'சாப்பிட்டாச்சா, வேற எதும் குறைவா இருக்கா'னு கேட்டு செய்வார். யார் வேணும்னாலும் அவரை அணுகலாம். அப்படித்தான் இருந்தார்.

அப்பொழுது இருந்த அந்த எளிதாக அணுகும் தன்மை, அரசியலுக்கு வந்த பின்னும் இருக்கு. இப்பவும் நான் அவரது வீட்டுக்கு நேரா போனா, உடனே உள்ள வர சொல்லி பார்ப்பார். நான் நெருங்கி பழகுன ரஜினி சார், கமல் சார்கிட்டக் கூட இது முடியாது. ஏன்னா, அவர்களுக்கு பல பிரச்சனைகள், தடைகள் இருக்கு. முன்னாடியே நேரம் கேட்டு, சந்திக்கப் போறது அவர்களுக்கு சரியா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் போகணும். அவர்கள் மேல் தவறல்ல, புகழ் பெற்றவர்கள், பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள் அப்படித்தான் பிஸியா இருப்பாங்க. ஆனால் அந்த நிலையிலும் எளிதாய் அணுக முடிந்தவராக இருப்பது கேப்டனின் குணம்.


 

 

vanaithaipola success meet



தமிழ் சினிமாவில் ஃப்லிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் என்றாலே ஒதுக்கிய காலத்தில், அவர்களை அழைத்து ஆதரித்து படம் செய்து அவர்களுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கியவர். ஆர்.கே.செல்வமணி சாருக்கெல்லாம் முதன் முதலில் நல்ல சம்பளம் வாங்கித்தந்தார்.  அவரோட தைரியமும் யாருக்கும் வராது. ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். அதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியிலேயே கலைஞருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார். கலைஞர் செய்வது தவறென்று நினைத்தால், அதையும் சொல்லுவார். மீடியாவை சரியாகக் கையாளவில்லைனு அவர் மேல் குற்றச்சாட்டு இருக்கு. ஆனா, கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்ட நிருபர்களைத்தான் அவர் திட்டினார். மற்றபடி அவருக்கு பத்திரிகையாளர்கள் நெருக்கம்தான்.

நடிகர் சங்க தலைவரா இருந்து அவர் செஞ்சது பெரிய வேலை. கடனை அடைத்தது, பல பிரச்சனைகளை முடித்தது என்று...அவர் இறங்கி வேலை செய்தார். அவரோட பிறந்த நாளன்னைக்கு அவரை சந்திக்கப் போவேன். அவர் பிஸியா இருக்காருன்னு நினைச்சு நாம கிளம்புனா, விடமாட்டார். 'இருங்க ரமேஷ்கண்ணா போலாம், மெதுவா'ன்னு உட்கார வச்சு நிறைய பேசுவார். ஒரு முறை, ரோட்டில் என் கார் பஞ்சராகி நின்றுகொண்டிருந்தேன். அவர் காரில் வந்தார், பிரேமலதாவும் இருந்தாங்க. என்னைப் பாத்துட்டு நிறுத்திட்டார். அவர் கூட மூணு நாலு கார் வந்தது. மக்களும் அவரை கவனிச்சுட்டாங்க. 'என்னாச்சு ரமேஷ் கண்ணா... டேய், இறங்கு என்னன்னு பாரு'னு சொல்றார். எனக்கு ஒரே பதற்றம், கூட்டம் கூடுது. "அண்ணே...நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன், நான் சரி பண்ணிட்டுப் போறேன்"னு சொல்றேன் கேக்கமாட்டேன்கிறார். கஷ்டப்பட்டு அனுப்புனேன். அவர் உயரத்துக்கு, என்னால் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனாலும் அப்படி நடந்துகொண்டார், அவர்தான் கேப்டன்.

அவர் உடல்நலம் பெற்று வருவதாகக் கேள்விப்பட்டேன், மகிழ்ச்சி. மீண்டும் அரசியலில் முழுவீச்சில் இறங்கவேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றிகள் பெறுவார். 'அவரை இவ்வளவு புகழ்றியே... நீ ஏன் அவர் கட்சியில் சேரல'னு கேக்குறீங்களா? நான் ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன், "அண்ணே... கட்சியில சேருறேன்'னு. வேற யாரா இருந்தாலும் பிரச்சாரத்துக்காவது பயன்படுவாங்கன்னு சேர்த்திருப்பாங்க. ஆனா அவரு, "சும்மா இரு ரமேஷ்கண்ணா, நீ போய் குடும்பத்தைப் பாரு. உனக்கு இந்த பிரச்னையெல்லாம் வேணாம். இது என் வேலை, நான் பாத்துக்குறேன். உனக்கு எதுவும் தேவைன்னா மட்டும் என்கிட்டே சொல்லு" என்று சொன்னார். அவர்தான் கேப்டன்!
 

 

முந்தைய பகுதி:

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5