Skip to main content

தமிழனால் பெருமைபெற்ற பிப்ரவரி 28

Published on 28/02/2018 | Edited on 02/03/2018

பிப்ரவரி 28- தேசிய அறிவியல் தினம் 


 

sir.C.V. Raman

 

கிழக்கில் சூரியன் உதிப்பதும், மேற்கே சூரியன் மறைவதும் கடவுளின் உத்தரவு, "கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும்" என்பது போன்ற மனிதனின் மூடநம்பிக்கைகளை உடைத்தது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்தான். "சூரியனை பூமி  சுற்றிக்கொண்டு இருப்பதால்தான் காலம் காலை, மாலை மாறி, மாறி வருகிறது, பருவநிலை மாறுகிறது என்கிற உண்மைகளையெல்லாம் சொன்னவர்கள் அறிவியல் அறிஞர்கள்தான். அப்படிப்பட்ட உண்மைகளை அவர்கள் சொல்லாமல் இருந்தால், நம்மை இன்றளவும் ஆன்மீகவாதிகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

 

அந்த அறிவியலை பாமரனும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான் "தேசிய அறிவியல் தினம்" என்கிற ஒரு தினத்தை உருவாக்கியுள்ளது இந்தியா. தேசிய அறிவியல் தினம் கொண்டாட முக்கிய காரணமாக இருந்தவர் இஸ்ரோ என்கிற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.ஆர். கோவாரிக்கர்தான். இவரே தேசிய அறிவியல் தினம் என்று ஒரு நாளை நாம் கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியவர். 1988ல் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ந்தேதியை இந்திய அறிவியல் தினம் என அறிவித்தது அரசு.

 

sir.C.V. Raman


பிப்ரவரி 28 ந்தேதியை அறிவிக்க என்ன காரணம்?

இந்தியாவின் அறிவியல் ஆய்வாளரும், கணிதவியல் அறிஞருமான சர்.சி.வி ராமன் என்கிற சந்திரசேகர வெங்கட்ராமன் ஐரோப்பில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து கப்பல் பயணமாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்காளவிரிகுடா கடல் பயணத்தின்போது இருந்த வானத்தின் மேற்பரப்பு நிறத்தை விட, அவர் பயணம் செய்துகொண்டிருந்த மத்திய தரைக்கடலின் வானம் நீல நிறமாக இருந்தது. இது அவர் மனதை உறுத்த அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தார். ஒளிச்சிதறல் ஏற்படுவதால்தான் நிறமாற்றம் ஏற்படுகிறது என கண்டறிந்தார். இந்த ஆய்வு முடிவை உலகம் ஏற்றுக்கொண்டதால் 1930ல் ராமனுக்கு நோபால் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதுக்கு காரணமாக இருந்த ஒளிச்சிதறல் பற்றிய ஆய்வை அவர் உலக அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் வெளியிட்ட நாள் பிப்ரவரி 28 அதனால்தான் அந்த தினத்தை தேர்வு செய்தது அரசு.  அந்த அறிக்கையை வெளியிடும்போது அவர் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது. இவர் திருச்சியிலுள்ள திருவானைக்காவல் என்ற இடத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்தியாவின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நாளை சிறப்பு நாளாக கொண்டாடுகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிகளே உலகத்தை பலகட்டமாக முன்னேற்ற பாதையில்  அழைத்து சென்றுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.