Skip to main content

பயிற்சியைத் தொடங்கினார் மெஸ்ஸி... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!!!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

messi

 

பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக தன்னுடையை பயிற்சியை மீண்டும் தொடங்கியதன் மூலம் நீண்டநாள் நீடித்துவந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த சாம்பியன் லீக் தொடரில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மெஸ்ஸியின் இந்த முடிவுக்குப் பின்னால் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடே காரணம் எனக் கூறப்பட்டது. மெஸ்ஸியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கும், பார்சிலோனா அணி ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மெஸ்ஸியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அடுத்த ஆண்டுவரை நீடிப்பதால் இந்த முடிவை ஏற்க முடியாது என்று அணி நிர்வாகம் அறிவித்தது.

 

இந்த அறிவிப்பிற்குப் பின் மெஸ்ஸி, நான் நேசித்த ஒரு அணியை நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த எனக்கு விருப்பமில்லை. வற்புறுத்தலின் காரணமாகவே அணியில் தொடர்கிறேன் என்று அறிவித்தார். மெஸ்ஸிக்கும் அணி நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட இந்த மோதல் வருத்தத்தைத் தந்தாலும், மெஸ்ஸி அணியில் தொடர்வதாக அறிவித்தது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. தற்போது பார்சிலோனா அணி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மெஸ்ஸி பயிற்சியில் ஈடுபடும் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. அதைத் தற்போது பார்சிலோனா ரசிகர்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.