Skip to main content

ஐ.சி.சி. வேர்ல்டு லெவன் அணியில் களமிறங்கும் பாண்டியா, தினேஷ் கார்த்திக்!

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டி20 போட்டியில் வேர்ல்டு லெவன் அணிக்காக ஹர்தீக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

Hardik pandya

 

கடந்த ஆண்டு வீசிய இர்மா மற்றும் மரியா புயல்களால் கரீபியன் பகுதிகளில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. இதற்காக நிதி திரட்டும் விதமாக, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வேர்ல்டு லெவன் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வேர்ல்டு லெவன் என்ற அணியில் விளையாடுவர். இந்த அணிக்காக விளையாடும் வீரர்களின் பெயர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.

 

இங்கிலாந்து நாட்டின் இயான் மோர்கன் தலைமைதாங்கும் இந்த அணியில், பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிடி, சோகிப் மாலிக், வங்காளதேசத்தின் சஹிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால், இலங்கையில் திசேரா பரேரா, ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியை கார்லஸ் ப்ராத்ஒயிட் தலைமைதாங்குவார். அந்த அணியில் கிறிஸ் கெயில், ரஸ்ஸெல் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெறுவர்.

 

இந்நிலையில், இன்று வேர்ல்டு லெவன் அணிக்காக இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஹர்தீக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அணிகளும் களமிறங்கும் போட்டி வரும் மே 31ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறும்.