Skip to main content

ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணி நேரங்களில் இராஜினாமா!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

sweden pm

 

ஸ்வீடன் நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமரும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான ஸ்டீபன் லோஃப்வென் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதனையடுத்து மாக்டலினா ஆண்டர்சன் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை மாக்டலினா ஆண்டர்சனுக்கு கிடைத்தது. ஆனால், பிரதமராகப் பதவியேற்ற 12 மணி நேரத்திற்குள் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

மாக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. ஆனால், கூட்டணியில் இல்லாமல் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் மத்திய கட்சி, ஆளும் அரசின் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. இதனால் அரசு கொண்டுவந்த வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த வரவு செலவு திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சியின் கூட்டணியிலிருந்து பசுமை கட்சி வெளியேறியதால், மாக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் கவிழ்ந்தது. இதனையடுத்து மாக்டலினா ஆண்டர்சன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

மேலும், ஒற்றைக் கட்சி (சமூக ஜனநாயக) அரசின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன் எனவும் மாக்டலினா ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் மத்திய கட்சி, இடது கட்சி, பசுமைக் கட்சி ஆகியவை மாக்டலினா ஆண்டர்சன் பிரதமராக ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் மாக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்