Skip to main content

"பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்" - திஷாவுக்கு க்ரெட்டா ஆதரவு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

GRETA - DISHA

 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு வெளிநாட்டுப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில் விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி க்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கிய ஆவணம் (toolkit) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி 26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், க்ரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, 22 வயதான இந்தியச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும் அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும் அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்து போலீஸ் காவலில் சிறையில் அடைத்தனர். திஷா ரவி, க்ரெட்டாவின் ‘ஃப்ரைடே ஃபார் ஃபியூச்சர்’ அமைப்பின், இந்தியக் கிளையை உருவாக்கி செயல்படுபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திஷா ரவியின் கைதிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவடைவதையொட்டி, டெல்லி போலீசார் நேற்று (19.02.2021) அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிமன்றம் திஷா ரவியை, மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

 

இந்த நிலையில் திஷா ரவியின் கைது குறித்து முதல்முறையாக க்ரெட்டா தன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். ‘ஃப்ரைடே ஃபார் ஃபியூச்சர் இந்தியா’ அமைப்பு, திஷா ரவிக்கு துணை நிற்பதாக சில ட்விட்களை செய்துள்ளது. அதை ரீ-ட்விட் செய்துள்ள க்ரெட்டா, “பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக கூடுவதற்கும், போராடுவதற்குமான உரிமை ஆகியவை சமரசத்திற்கு அப்பாற்பட்ட மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும். #StandWithDishaRavi" எனப் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்