Skip to main content

கரோனா பரவல்; சுதந்திரமாக ஆய்வு செய்ததா நிபுணர் குழு? - பேட்டியில் வெளிவந்த உண்மை!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

who - china

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

 

இதனைத் தொடர்ந்து கரோனாவின் தோற்றம் குறித்து ஆராய, உலக சுகாதார நிறுவனம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. முதலில் இந்த நிபுணர் குழுவிற்கு தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளிக்காத சீனா, உலக சுகாதார ஆணையத்தின் அறிவுறுத்தலுக்குப் பின் அனுமதியளித்தது.

 

இந்த நிபுணர்குழு வுகான் வைராலஜி ஆய்வு நிறுவனம், கரோனா முதலில் அதிகம் பரவத் தொடங்கிய கடல் உணவுச் சந்தை ஆகிய இடங்களை ஆய்வு செய்தது. பிறகு சீனாவில் 2019 டிசம்பருக்கு முன் கரோனா தொற்று இல்லை என்றும், கரோனா ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது. மேலும் கரோனா தொற்று வௌவாலிடமிருந்து, விலங்கிற்குப் பரவி அதன் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்காலம் எனக் கூறியது.

 

இந்த நிலையில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றிற்குப் பேட்டியளித்த, சீனாவில் ஆய்வு செய்த நிபுணர் குழு உறுப்பினர் ஒருவர், கரோனா பரவல் முதன்முதலில் சீனாவில் எப்போது பரவியது என்பதைக் கண்டறிவதற்காக, முதன்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் (எந்த மாற்றமும் செய்யப்படாத) தகவல்களை நிபுணர் குழு கேட்டதாகவும், அதனைத் தருவதற்கு சீனா மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக சீன அதிகாரிகளுக்கும், நிபுணர் குழுவுக்கும் சூடான விவாதம் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

 

இதனால், 2019 டிசம்பர் 19க்கு முன் சீனாவில் கரோனா இல்லை என்ற உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவின் கூற்று சரியானதா? நிபுணர் குழு அங்கு சுதந்திரமாக ஆய்வு நடத்தியதா என்று தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்