Skip to main content

காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கச் சென்ற காதலன்; சரமாரியாக வெட்டிய தாய்மாமன்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

uncle hacked her boyfriend when he went to cutcake for his girlfriend's birthday

 

கோவை காந்திநகரை சேர்ந்த விஜயகுமார் மகன் பிரசாந்த்(21). சுமை தூக்கும் தொழிலாளரான பிரசாந்த் மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவர, பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் மகளின் தொடர் வற்புறுத்தலால் அவர்களும் இருவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்கிறோம். சிறிது காலம் கழித்து சேர்த்து வைக்கிறோம் என்று இருவருக்கும் அறிவுரை கூறியுள்ளனர். 

 

இந்த நிலையில் அந்த பெண்ணின் பிறந்தநாளான நேற்று தனது நண்பர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து காதலியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலியின் பிறந்த நாளை நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்த பிரசாந்த் முன் தினம் இரவு தனது நண்பர்களுடன் கேக் வாங்கிக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிரசாந்தும் அவரது நண்பர்களும் மது போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இரவு நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டு கதவு பூட்டியிருந்ததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற பிரசாந்தும் அவரது நண்பர்களும் அந்த பெண்ணை வெளியே வரச்சொல்லி கூச்சலிட்டுள்ளனர். 

 

மேலும் வீட்டின் கதவை தட்டி காதலியை வெளியே அழைத்துள்ளனர். அப்போது பெண்ணின் தந்தையும், தாய்மாமன் விக்னேஷும் வெளியே வந்துள்ளனர். அப்போது தனது காதலியை வெளியே வரச்சொல்லி பிரசாந்த் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய்மாமன் விக்னேஷ் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து பிரசாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பிரசாந்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண்ணின் தாய்மாமன் விக்னேஷை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் பெண்ணின் தந்தையிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்