Skip to main content

உணவு தயாரித்து விற்ற மாணவர்கள்; வரும் பணத்தில் ஆதரவற்றோருக்கு சேவை

Published on 07/11/2022 | Edited on 07/11/2022


சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவுப் பொருட்கள் விற்பனை திருவிழா 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சார்பாக ஒருவார காலத்திற்கு தினசரி நடைபெறுகிறது.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் சிறந்த பள்ளியாகப் பெயர் பெற்று விளங்கும் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. குறிப்பாக அலுவலகத்தை நிர்வகித்தல், விற்பனை திறனை மேம்படுத்துதல் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் மாணவர்களை மேம்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்கள் சார்பாக ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இவ்வருடமும் வழக்கம்போல் உணவு விற்பனை திருவிழா நடைபெற்றது.

 

பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவு பதார்த்தங்களைப் பள்ளியின் இடைவேளையின் போது மற்ற மாணவ மாணவியருக்கு விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைச் செலவு போக மீதியுள்ள வருவாயைப் பள்ளி முதல்வரிடம் வழங்கி தொண்டு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். நேற்று 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் விற்பனை விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் இல்லத்தில் தயாரித்த முறுக்கு, சீடை, லட்டு, பூந்தி, வடை, இனிப்பு போலி, சோமாஸ், குலோப்ஜாம், கேசரி, பணியாரம், பானி பூரி, சுண்டல் ஆகியவற்றை மற்ற மாணவர்களுக்கு விற்று அதில் உள்ள இலாபத்தைப் பள்ளி முதல்வரிடம் வழங்கினார்கள்.

 

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்... “எங்கள் வீட்டில் தயாரித்த பொருட்களை மற்ற மாணவர்களுக்குக் கொடுத்து அதில் வரும் லாபத்தை ஆதரவற்றோருக்கு வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.

 

பள்ளியில் நடைபெற்று வரும் உணவுப் பொருட்கள் விற்பனை திருவிழா குறித்து பள்ளி முதல்வர் திலகம் கூறுகையில், “ஒரு சிறந்த மாணவ மாணவியரை உருவாக்குவதில் எங்கள் பள்ளி எப்போது முதலிடம் வகிக்கும். குறிப்பாகப்  பிறருக்கு உதவும் மனப்பான்மை, விற்பனையை மேம்படுத்துதல், பொருளை விற்று அதில் வரும் லாபத்தை எவ்வாறு கணக்கீடு செய்வது அதைப் பிறருக்கு எந்த வழியில் உதவுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். இதற்குப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆதரவு அளித்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சக மாணவர்கள் முதற்கொண்டு ஆசிரியர் வரை அவர்களிடம் விற்பனை செய்து அதில் வரும் லாபத்தை ஆதரவற்றோருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருவது எங்கள் பள்ளி மாணவர்களின் மனித நேயத்தைக் காட்டுவதாக இருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்