Skip to main content

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நெல்லை தங்கராஜ் மரணம்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Nellai Thangaraj, who became famous for the movie Pariyerum Perumal, passed away

 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

 

மரபார்ந்த தமிழ்க் கலைகளின் முன்னோடியாக இருக்கும் தெருக்கூத்தில், பெண் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தவர் தங்கராஜ். கூத்து மரபில் பெண் வேடமிட்டு நடிப்பவர்களின் இயல்பு வாழ்க்கையும் அதே பெண் மனப்பாங்கோடே இருக்கும் என்பார்கள். அதுபோலவே இவரின் ஒப்பாரிக்கு கண்ணீர் சிந்தாதவர் இல்லை. அப்படி ஒருநாள் வெள்ளரி தோட்டத்தில் காவலில் இருந்தவரை எழுப்பி ஒப்பாரி பாடச் சொல்லிக் கேட்டு திரையில் நடிக்க வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ் தனது சிறந்த நடிப்பால் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றார். வயதாகிவிட்டதால் தங்கராஜ் தெருக்கூத்தில் வேடம் கட்டி ஆடுவதை நிறுத்தி விட்டார்.  இரண்டு மகள்களையும் படிக்க வைத்துவிட்ட இவர், குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து எலுமிச்சை, பனங்கிழங்கு, காய்கறி போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் விற்றுப் பிழைத்து வந்துள்ளார். அந்த வியாபாரமும் முடங்க ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்பட்டார். 

 

குடிசையில் வசித்த அவரின் வீடு பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்துள்ளது. அவருடைய வீட்டை சீரமைத்துத் தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தமுஎகச மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜுக்கு வீடு கட்டப்பட்டது. இந்நிலையில் கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்