Skip to main content

நெல்லை வன்கொடுமை, கொள்ளை, கொலை... இரண்டு பேருக்குத் தூக்கு... மகிளா கோர்ட் அதிரடி!!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியின் கல்லிடைக்குறிச்சியில் கடந்த 2008 அக்-01 தேதியன்று நர்ஸ் தமிழ்செல்வி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

கல்லிடைக்குறிச்சி கேட் வாசல் தெருவை சேர்ந்த தமிழ்செல்வி. மணிமுத்தாறின் வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றினார். இவரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன் ராஜேஷ் கண்ணா, கோவையில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார்.

 

nellai


இந்நிலையில் தமிழ்செல்வி அவரது வீட்டு மாடியில் 2008 அக்-01 தேதியன்று காலை படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வாயினுள் டவலை திணித்து நைலான் கயிறால் கழுத்தை நெரித்து வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதோடு வீட்டு பீரோவில் இருந்த ரூ.1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். தகவலறிந்த அப்போதைய நெல்லை டி.ஐ.ஜி. கண்ணப்பன், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. ராஜமோகன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் அக்பர்கான் விசாரணை மேற்கொண்டார். அது தெடர்பாக கார்த்திக் மகேந்திரன் ராஜேஷ் வசந்தகுமார் உட்பட 6 பேர்களைக் கைது செய்தார். இதனை அடுத்து ஆய்வாளர் பொன்னுசாமி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்த வந்தது. இதில் ஏ3, ராஜேஸ் ஏ4. வசந்தகுமார் இருவரும் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்ததுடன் ஆதாரமாக செவிலியரின் உடலிருந்த ஆடைகளில் படிந்திருந்த இவர்களின் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆதாரங்கள் தடயவியல் துறையினால் நிரூபிக்கப்பட்டதையடுத்து. நேற்று ராஜேஸ் மற்றும் வசந்தகுமார் இருவருக்கும் நெல்லை மகிளா கோர்ட் நீதிபதி இந்திராணி தூக்கு தண்டனையளித்து தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களாம்  எனவே மற்ற நான்கு பேர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பால்கனி ஆஜரானார். இந்தத் தீர்ப்பு தென் மாவட்டத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்