Skip to main content

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறிய மருத்துவர்கள்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Negligence in Erode Government Hospital

 

ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 75. டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மினி.இவர்களுக்கு இரண்டு மகன் உள்ள நிலையில் மனைவி பத்மினி, மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் ராஜசேகருக்கு, கடந்த 12 ஆம் தேதி மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

 

இதையடுத்து உறவினர்கள் ராஜசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு தலைமை மருத்துவமனையில் ராஜசேகரை பிரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் அவரை ஐ.சி.யூவில் சிகிச்சைக்காக அட்மிட் செய்து சிகிச்சை பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம்(14.10.2023) மருத்துவமனை தரப்பில் இருந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ராஜசேகர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் பிணவறையில் இருக்கும் என்றும் கூறி உள்ளனர். மேலும் அதனை உறவினர்களிடம் தெரிவிக்கும் படியும் கூறி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறை மூலம் உறவினர்களுக்கு இது குறித்து தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜசேகரன் உடலைப் பெற அமரர் ஊர்தி எடுத்துக்க கொண்டு நேற்று(15.10.2023) அரசு தலைமை மருத்துவமனையின் பிணஅறைக்கு வந்தனர். அப்போது பிணவறையில் சென்று பார்த்த பொழுது ராஜசேகர் பெயரில் எந்த உடலும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர். அதன் பின் மருத்துவமனை நிர்வாகித்திடம் கேட்டபோது, ராஜசேகர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் யாராவது தெரியாமல் கூறி இருப்பார்கள் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளனர்.

 

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் எப்படி இது போன்று கூறலாம் என்று முதலில் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ராஜசேகருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையைப் பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அரசு மருத்துவமனையை நம்பி ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் நிலையில், இது போன்று ஒரு சில மருத்துவர்கள் செய்கின்ற சம்பவங்கள், பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உயிருடன் சிகிச்சை பெற்று வருபவரை இறந்து விட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.