Skip to main content

"தமிழகத்தில் பத்திரிகையாளர்களால் பாதுகாப்பாக உணர்கிறோம்" -  நளினி பேட்டி 

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

nalini said We feel safe with journalists tamilnadu

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் தற்போது இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திப்பதற்காக நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தனர். சுமார் 6 மணி நேரம் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நான்கு பேருடன் விவாதித்து விட்டு வெளியே வந்த நளினி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர், “ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் யார் என்பது எனக்குத் தெரியாது. சிறப்பு முகாமும் சிறை போன்றதுதான் அதிலிருந்து 4 பேரும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும், அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்கு, அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என அரசுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் எனது கணவரை நான் 6 மணி நேரம் சந்தித்துப் பேசவில்லை. அவரை சந்திப்பதற்கான நடைமுறைகளை முடிப்பதற்கு நீண்ட நேரம் சிறப்பு முகாம் வாசலில் காத்துக் கிடந்தேன். அவர்களைச் சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் முன் வைத்துள்ளேன். அதனை அவர் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுள்ளார்.

 

எங்களது குடும்பம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தைக் கொண்டது. இந்திரா காந்தி மறைவின் போதும், ராஜீவ்காந்தியின் மறைவின்போதும், அதற்காகக் கண்ணீர் வடித்து எங்களது குடும்பம் வருந்தியிருந்தது. ராஜீவ் கொலையானபோது எங்கள் குடும்பமே மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தோம். முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கைக்குச் செல்ல விரும்புகிறார். எனது கணவர் முருகனுடன் நான் லண்டனுக்குச் சென்று மகளுடன் வாழ விரும்புகிறோம். விடுதலையான பின்னும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். அவர்களை மிகுந்த சிரமப்பட்டுத் தேற்றினோம். எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறோம்.

 

நாங்கள் நிரபராதிகள் தேவையில்லாமல், 32 ஆண்டுகள் சிறையிலிருந்தோம். ஆனால் ராஜீவ் கொலையாளிகள் யார் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அனைவரும் எங்களது குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் சிறையிலிருந்தபோது நிறைய கோயில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது என்று வேண்டி இருந்தோம். அவற்றையெல்லாம் நிறைவேற்ற விரும்புகிறோம்.

 

முருகனைத் தவிர்த்த மற்ற மூன்று பேரும் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாலும், அங்கு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் அதற்கு இடம் கொடுக்குமா? என்று தெரியவில்லை. எனவே அவர்கள் விரும்புகின்ற நாட்டிற்கு அவர்களை அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்