Skip to main content

'ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்பதை நிரூபித்துவிட்டார்' - புகழேந்தி பேட்டி

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

'Jayalalitha's successor has proved that he is OPS'-pugazhendi interview

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

'Jayalalitha's successor has proved that he is OPS'-pugazhendi interview

 

பின்னர் நீதிமன்றத்தின் வெளியில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, 'நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா அவர்கள் அளித்த தீர்ப்பினை தலை வணங்கி ஏற்பதாகவும் வரவேற்கிறேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டும் தீர்மானத்திற்கு இரண்டாவது முறையாக ஆதரவளித்தார். ஒப்புதல் தராமல் ஆளுநர் வைத்திருந்து திருப்பி அனுப்பியது தவறு என மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கு ஆதரவாக குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

 

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று 2020இல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்பதனை மறந்து ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் பழனிசாமி வெளிநடப்பு செய்தார். அவரை சார்ந்தவர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உள்ள அமைச்சர் சுட்டிக் காட்டி ஜெயலலிதா மீது அக்கறை இல்லாத பழனிசாமி என்பதை விவரித்து பேசியதை மறந்து விட முடியாது.. யாருக்கோ பயப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார்கள். ஜெயலலிதா பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் என்ற தீர்மானத்திற்கு ஆதரவளித்து ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்பதை ஓபிஎஸ் அவர்கள் சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்