திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி ஒருவர் மருத்துவமனையில் உள்ள உடைமைகளை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குள் சரித்திர பதிவேடு குற்றவாளியான வடிவேலு மதுபோதையில் உள்ளே புகுந்தார். திடீரென மருத்துவமனையில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களை தூக்கி உடைத்த அவர், நோயாளிகள் காத்திருப்போர் அறைக்கு சென்று நடனம் ஆடினார். அங்கிருந்த பெண் ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதனால் பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுபோதையில் இருந்த ரவுடி வடிவேலுவை கைது செய்தனர். ஆனால் விசாரணையில் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.