Skip to main content

முகக் கவசத்தை முடக்கிய எடப்பாடி அரசு..!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

Face Mask issue in edappadi government


ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில், விநியோகம் செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசங்களை முழுமையாக அரசு கொள்முதல் செய்யாததால், 5 கோடி முகக் கவசங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், ஈரோடு, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்ட உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசங்கள் அணியுங்கள் என மக்களுக்கு அரசு அறிவுரை கூறியது. இதில், தமிழகத்தில் உள்ள 2 கோடியே 80 லட்சம் ரேஷன் கார்டுகளில் உறுப்பினர்களாக உள்ள 6 கோடியே 74 லட்சம் பேருக்கு, துணியாலான முகக் கவசம் தலா 2 வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்தது. இந்த உற்பத்திக்கான ஆர்டர் பல்வேறு மாவட்டங்களில் அரசுமூலம் பெறப்பட்டு, முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. 

 

இதில், உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசங்களை அரசு முழுமையாகக் கொள்முதல் செய்யாமலும், ஏற்கனவே கொள்முதல் செய்த முகக்கவசத்துக்கு முழு தொகையைக் கொடுக்காமலும் அரசே இழுத்தடிக்கிறது. இதனால், இதை உற்பத்தி செய்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு மாவட்டத்தில் முகக் கவசம் உற்பத்தியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ரேஷன் கார்டு உறுப்பினர்கள் 6.74 கோடி பேருக்கு, 13.48 கோடி முகக் கவசமும், இதர பயன்பாட்டுக்காக 1 கோடி முகக் கவசம் என 14.48 கோடி முகக் கவசத்துக்கு, உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியது. இதில், 24 நிறுவனங்கள் டெண்டர் கோரியது. இதில், 13 நிறுவனங்களின் டெண்டரை அரசு ஏற்றது, ஈரோடு, திருப்பூர், தாராபுரம், தர்மபுரி, சேலம், விருதுநகர் எனப் பல்வேறு பகுதியில் ஆயத்த ஆடை தயாரிப்போர், மகளிர் தையல் குழுவினர், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை தைத்துக் கொடுப்போரிடம் முகக் கவசம் உற்பத்தி செய்யும் பணி பிரித்து வழங்கப்பட்டது. 

 

Face Mask issue in edappadi government

 

ஒரு முகக் கவசத்திற்கு 6 ரூபாய் 45 பைசா என ஒப்புதல் செய்தனர். இதைத் தைத்துக் கொடுப்போருக்குத் துணி, நூல், குறைந்தபட்சத் தொகை வழங்கினார்கள். இளம்பச்சை, அடர் பச்சை, நீல நிறத் துணியை வெட்டி, தைத்துக் கொடுக்க, ஒரு முகக் கவசத்திற்கு ரூபாய் இரண்டு எனக் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது.  கடந்த அக்டோபர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசங்கள் பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்யப்பட்டது. 

 

இதற்கிடையே எதிர்க் கட்சிகள் தமிழக அரசின் முகக் கவசம் உற்பத்திப் பணியில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சுமத்தியது. இதனால் டெண்டர் பெற்றவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு தொகையை அரசு வழங்கிய பின், மீதத் தொகையைத் தரவே இல்லை. ரேஷன் கடைகளிலும் 40 முதல் 60 சதவீதம் பேருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்குவதற்கான முகக் கவசத்தை உற்பத்தி செய்து 5 கோடி முகக் கவசம் தயாராக உள்ளது. டெண்டர்கள் எடுத்தவர்கள் உற்பத்தியாளர்களுக்குப் பணம் தரவில்லை. தைத்துக் கொடுப்போர் பணம் கேட்பதால், உற்பத்தியாளர்களால் பதில் கூற முடியவில்லை. அரசு முழு பணத்தை விடுவித்ததும், உற்பத்திக்கான கூலியை மொத்தமாக வழங்கி தைத்துவைத்துள்ள முகக் கவசத்தைக் கொள்முதல் செய்துகொள்கிறோம் என டெண்டர்கள் எடுத்தவர்கள் கூறுகின்றனர். 5 கோடி முகக் கவசத்தை எப்போது எடுத்து, பணம் தருவார்கள் எனத் தெரியவில்லை.
 

cnc


இந்தப் பணியில் 80 சதவீதம் பேர் பெண்களே ஈடுபட்டுள்ளதால், அவர்களுக்குக் கூலி கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். மேலும், தைத்துவைத்த 5 கோடிக்கும் மேற்பட்ட முகக் கவசத்தை அரசு கொள்முதல் செய்யாமல் போனால், தைத்துக் கொடுத்தவர்களுக்கு பல கோடி ரூபாயை யார் எவ்வாறு வழங்குவது எனத் தெரியாமல் பரிதவிக்கிறோம்." என்றனர். 


பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி இந்த கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு செலவிட்டுள்ளது என எடப்பாடியும், ஒ.பி.எஸ்.சும் கூறுகிறார்கள். முறைப்படி டெண்டர் எடுத்து முகக்கவசம் தைத்துவைத்துள்ள இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து, முகக் கவசம் வாங்கி, மக்களுக்குக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அ.தி.மு.க அரசு.

 

 

 

சார்ந்த செய்திகள்