Skip to main content

இரட்டை இலை விவகாரம்..கோரிக்கை வைத்த அதிமுக.. அசைன்மென்ட் கொடுத்த பாஜக..

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

அதிமுக கூட்டணியில் 5 இடங்களை பெற்ற பாஜக தலைமை, அந்த 5 இடங்களிலும் வெற்றிபெற்றே தீரவேண்டும் என கங்கணம் கட்டியிருக்கிறது. இதற்கு அதிமுகவின் தொண்டர்கள் பலத்தையே நம்பியிருக்கிறது பாஜக.  மேலும் பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர். அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் பெரும்பாலான தொண்டர்களின் நாற்காலிகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

modi

 

இந்நிலையில் குமரியில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் மேடையேற வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்களும் பெருமளவில் திரளவேண்டும்  என டெல்லியிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில்  நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வர இருக்கிறது. அதில் தங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்கள் பக்கம் கொண்டுவருவது மிகமிக கடினம். தங்கள் பக்கம் இரட்டைஇலை சின்னத்தை கொண்டுவர ஏதேனும் வழிவகை செய்யமுடியுமா என அதிமுக தலைமை டெல்லிக்கு தூதுவிட்டிருக்கிறது.

 

modi

 

அதற்கு, '' பொதுவாக நீதிமன்ற விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. ஆனால் உங்கள் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம் நீங்கள் மோடியின் குமரி கூட்டத்திற்கு தொண்டர்களை திரட்டும் பணியை பாருங்கள்'' என உத்தரவு வந்ததாம். இதையடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் தென்மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிக அளவில் தொண்டர்களை கூட்டிவர வேண்டும் என்று அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்றவர்களோ முதலில் நாளைய தகவலை பார்ப்போம் பிறகு பொதுக்கூட்டத்தை பற்றி யோசிப்போம் என முனுமுனுத்தபடியே சென்றார்களாம்.  

 

 

சார்ந்த செய்திகள்