Skip to main content

எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆர்.காமராஜ் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

Court dismisses cases of former ministers SB Velumani and R Kamaraj ..!

 

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராகவும், அமைச்சர்களின் மீதான புகார்களில் விசாரணை நடத்த பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமென்ற அரசாணையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தித்தில் தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு திரும்பப் பெற்றுள்ளார்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம்  செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வாக இருந்த அப்பாவு புகார் அளித்திருந்தார்.

 

அதேபோல, கரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் புகார் அளித்திருந்தார்.

 

Court dismisses cases of former ministers SB Velumani and R Kamaraj ..!

 

இந்த இரு புகார்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பியதாக குற்றம்சாட்டி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.

 

அதேபோல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த  பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும்,முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலாளர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

Court dismisses cases of former ministers SB Velumani and R Kamaraj ..!

 

இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது சபாநாயகராகத் தேர்வாகியுள்ள அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து மூன்று வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்