Skip to main content

கத்தியைக் காட்டி வழிபறியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
BJP executives involved in knife-wielding were arrested one after the other

வேலூர் மாவட்டம்  வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிய இருவரையும் பிடித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காட்பாடி காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் எனத் தெரியவந்தது.

இதில் ராஜேஷ் பாஜக தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக  இருப்பதும், நவீன்குமார் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது . பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டிய பாஜக பிரமுகர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், வேலூரைச் சேர்ந்த வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் கிளி என்கிற சதீஷ்  (34 ). இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடையதாக இவரை போலீசார் தேடி வந்தனர் .

இந்த நிலையில்  பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாக பேசி வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் விஜய் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பள்ளிகொண்டா போலீசார் கிளி என்கிற சதீஷ்  மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து பாஜக பிரமுகர்கள் வழிப்பறியில்  ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்