ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த இ.புதுக்கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் இருவரும் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். வண்டியை விக்னேஷ் ஓட்டி வர, ராமன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்தபோது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்த்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். விபத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள், இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.