தஞ்சாவூர் மாவட்டம், பேரவூரணி பகுதியில் 1980 காலகட்டத்தில் தொடங்கிய மொய் விருந்துகள் படிப்படியாக விரிவடைந்து பேராவூரணியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், நெடுவாசல், வேம்பங்குடி தொடங்கி தற்போது ஆலங்குடி, வம்பன் வரை நடத்தப்பட்டு வருகிறது.
இரு மாவட்டங்களிலும் மொய் விருந்துகள் நடப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும் தஞ்சை மாவட்டத்தில் ஆவணி மாதம் என இரு மாதங்களும் ஊரெல்லாம் கறி சோறு கமகமக்கும். வெள்ளை வேட்டி சட்டைகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். கட்டுக்கட்டாக பணம் எண்ண வங்கி அதிகாரிகளும், இயந்திரங்களும் பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்களும் இருப்பார்கள். ஆயிரக் கணக்கானோருக்கு வேலையும் கிடைத்தது. ஆனால், கடந்த 5 வருடங்களாக கஜா புயல் தொடங்கி, கொரோனா ஊரடங்குகளால் மொய் விருந்துகள் முடங்க தொடங்கிவிட்டது.
கோடிகளில் மொய் வாங்கியவர்கள் கூட பல லட்சங்களில் குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். பல கிராமங்களில் மொய் வரவு செலவுகளை துண்டித்து வருகின்றனர் ஆயிரக்கணக்கானோர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்துகள் முடிவுற்ற நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது.
இன்று போவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் இல்ல காதணி மற்றும் மொய் விருந்து விழா காலையில் தொடங்கி நடந்து வருகிறது. மொய் வசூலாகிக் கொண்டிருக்கிறது இன்னும் சில மணி நேரத்தில் மொத்த மொய் வசூல் என்ன என்பது தெரிய வரும்.