Skip to main content

“அனைத்து குளங்களுக்கும் மழைநீர் வரும்படி வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்படும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
All ponds will be provided with rainwater drainage facilities  says I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சியில் என்.ஆர்.ஜி.இ.எஸ். மற்றும் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடம் மற்றும் அப்பனம்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவரும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபானி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி ராமமூர்த்தி வரவேற்றார்.

இதில் சில்வார்பட்டி ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்துவிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீர்வு வழங்கிய பின்பு அவர்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் சில்வார்பட்டி கிராமம் எப்போதும் எனக்கு ஆதரவு தரும் கிராமமாகும். 1989ம் ஆண்டு முதல் இன்று வரை 34 ஆண்டுகளாக எனக்கு நீங்கள் ஆதரவு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பகுதி மக்கள் குளங்களை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் குளங்களுக்கு நீர்வரத்து பாதைகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளீர்கள். 

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மட்டுமின்றி ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மழை தண்ணீர் வரும்படி சிமெண்ட் வாய்க்கால் அமைத்து கொடுக்கப்படும். ஏற்கனவே இது குறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் வடக்குப் பகுதி விவசாயிகளின் நலன் காத்து என்றும் அவர்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

இந்த ஊராட்சியை பொறுத்தவரை தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். கிராமங்கள் தோறும் புதிய நாடக மேடைகள், புதிய அங்கன்வாடி மையங்கள், அனைத்து கிராமங்களுக்கும் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் புதிய தார்ச் சாலைகள் உட்படப் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டிக் கொடுக்கப்படுவதோடு காவிரி கூட்டுக் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்